சென்னையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. அதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கு விற்பனையாகிறது.


முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், ஊரடங்கின் போதும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர். டீசல் மீதான பெரியளவிலான கலால் வரிக் குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.


சமீப மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, சமீப வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உள்நாட்டில் அதிகரித்து வருகின்றன. நாட்டில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட மந்தநிலைக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும்- உற்பத்தி, சேவை அல்லது விவசாயம்- குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன.


பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியைக் கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு, நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தைக் குறைக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்றைய முடிவு ஒட்டுமொத்த பொருளாதாரச் சுழற்சியை மேலும் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக் கூட்டு வரி)  மாநிலங்கள் குறைக்க வேண்டும்" என்று தெரிவித்தது.