சென்னையில் இன்றும் பெட்ரோல்,  டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.




கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.


இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 56 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 


இந்நிலையில் 56வது நாளாக இன்று ( ஜூலை 16) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.