நம்மில் பெரும்பாலனவர்கள் வங்கியில் அதிகமாக வாங்கும் கடன் வீட்டு கடன் தான். தனிப்பட்ட பெர்ஷனல் லோனிற்கு பிறகு அதிகமாக நபர்கள் வங்கியை நாடுவது வீட்டு கடனுக்காக தான். அந்த லோனிற்கு இஎம்ஐ நம்முடைய மாத சம்பளத்தில் ஒரு பங்காக எப்போதும் சென்றுவிடும். இப்படி பல மாதங்கள் இஎம்ஐ  கட்டு வீட்டு கடனை முடித்த நபராக நீங்கள் அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளீர்களா? இதோ உங்களுக்காக வல்லுநர்கள் மற்றும் முதலிட்டு ஆலோசகர்கள் சொல்லும் யோசனை என்ன?


வீட்டு கடன்  என்பது மிகப்பெரிய கடன்களில் ஒன்று. அதை நீங்கள் வெற்றிகரமாக முடித்தப்பிறகு மாதம் உங்களுடைய சம்பளத்தில் ஒரு தொகை அப்படியே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏற்கெனவே ஒரு வீடு வாங்கிய நீங்கள் அடுத்த வீட்டு கடன் வாங்கி மேலும் ஒரு வீட்டில் முதலீடு செய்வது சற்று தவறான ஒன்று. ஏனென்றால் அதைவிடை வேறு சில முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று முதலீட்டு ஆலோசகர்கள் கருதுகின்றனர். அதன்படி நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது:


அவசரகால சேமிப்பு:


எப்போதும் நம்முடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எப்போதும் அவசர கால தொகையாக சேமித்து வைத்திருப்பது நல்லது. அதாவது அந்த அவசரகால நிதி என்பது உங்களுடைய 3 அல்லது 5 மாதங்களுக்கான வீட்டு செலவிற்கு தேவையான அளவு இருக்க வேண்டும். அது தான் உங்களை எப்போதும் கஷ்டமான நேரங்களில் காப்பாற்றும் வகையில் அமையும். ஆகவே வீட்டு கடன் முடிந்தவுடன் அந்த அவசர கால நிதியில் உங்களுடைய சேமிப்பை செலுத்த வேண்டும். அது ஒரு நல்ல முதலீடாக அமையும். 


குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சேமிப்பு:


பொதுவாக வீட்டு கடனிற்கு பிறகு அடுத்த முக்கியமான விஷயம் நமது குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலம் தொடர்பான செலவு தான். ஆகவே வீட்டு கடன் சுமை முடிந்தவுடன் அந்த விஷயத்திற்கு நம்முடைய கவனத்தை திருப்ப வேண்டும். அவர்களின் படிப்பு செலவிற்கு தேவைப்படுகின்றன வகையில் ஒரு சேமிப்பு திட்டம் அல்லது எல்ஐசி பாலிசி ஆகியவற்றில் பணத்தை கட்ட தொடங்கலாம். 


பங்குச்சந்தை மற்றும் இதர முதலீடுகள்:


இவை தவிர நீங்கள் சற்று ரிஸ்க் எடுக்கும் நபர் என்றால் பங்குச்சந்தை உள்ளிட்ட இதர முதலீடுகளில் உங்களுடைய பணத்தை போட தொடங்கலாம். ஆனால் இதில் சற்று அபாயம் உள்ளதால் இந்த முதலீட்டை உங்களுடைய கடைசி கட்ட திட்டமாக வைத்திருங்கள். அதேபோல் ஓய்வு கால நிதி தொடர்பான முதலீடுகளை கூட தற்போது நீங்கள் அதிகமாக சேமிக்க தொடங்கலாம். அந்த முதலீடு உங்களுடைய ஓய்வு நாட்களில் பயன்பெறும் வகையில் அமையும்.  இவ்வாறு நீங்கள் உங்களுடைய மிச்சமாகும் பணத்தை முதலீடு செய்து சேமித்து கொள்ளலாம். 


மேலும் படிக்க: வைப்பு நிதிகளில் குறையும் வட்டி விகிதம்.. அதிக வருமானம் பெற எதில் முதலீடு செய்யலாம்?