எல்.ஐ.சி நிறுவனம் வழங்கும் பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. வரும் 2023-ஆம் ஆண்டு, மார்ச் 31 வரை, பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு மேற்கொள்ளலாம். எனினும், அடுத்த நிதியாண்டில் விற்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் ஓய்வூதிய விகிதங்கள் கணக்கிடப்பட்டு, அடுத்த நிதியாண்டில் வெளியிடப்படும். 


எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், `2021-22ஆம் நிதியாண்டில், மாதம்தோறும் அளிக்கப்படும் ஓய்வூதியம் ஆண்டுக்கு 7.4 சதவிகிதம் என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். 2022ஆம் ஆண்டு மார்ச் 31 வரை, இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட காப்பீடுகள் அனைத்தும் இதே சதவிகிதத்தில் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது. 



இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதலீடுகளை வாங்கும்போது என்ன விகிதம் குறிப்பிடப்படுதோ, அதே விகிதத்தின் அடிப்படையில் திட்டத்தின் மொத்த 10 ஆண்டுகளுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், 2021-22-ஆம் நிதியாண்டிற்கான 7.4 சதவிகித வட்டி விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், வரும் மார்ச் 31 வரை மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு இதே விகிதம் உறுதி செய்யப்படும்.


அந்தந்த நிதியாண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்படும் வட்டி விகிதங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டும், 10 ஆண்டுகளுக்கு அதுவே தொடரப்படுகிறது. தற்போது, பெரும்பாலான முன்னணி வங்கிகள் சுமார் 6.5 சதவிகிதம் வட்டி விகிதத்தில் தங்கள் திட்டங்களை 1 முதல் 10 ஆண்டுகள் சேமிப்புகளை மேற்கொள்ள வழங்குகின்றன.


பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 முதல் 7.6 சதவிகிதம் என்ற அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படுவதோடு, அதனை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாதம் ஆகிய கால அளவுகளுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.



பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டம் என்பது 10 ஆண்டுகளுக்கு அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டு, ஓய்வூதியம் என்ற வடிவத்தில் தொடர்ந்து ஊதியம் பெறுவதற்கான திட்டமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையை `வாங்கும் விலை’ என அழைக்கின்றனர். 


இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது, ஓய்வூதியமாக மாதம் தோறும் 9250 ரூபாய் வழங்கப்படுகிறது. கணவன், மனைவி இருவரும் 60 வயதைக் கடந்தவர்கள் என்னும் போது, அவர்களின் ஒட்டுமொத்த முதலீடும் சுமார் 30 லட்சம் ரூபாய் எனவும், அந்தக் குடும்பம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் சுமார் 18500 ரூபாய் பெற முடியும்.