உலகளாவிய நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, தங்கத்தின் விலை வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 10 கிராம் தங்கம் 60 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 


சந்தையில் நிலையற்ற தன்மை:


உலகளாவிய சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வருவதால் முதலீடு செய்ய பாதுகாப்பான ஒன்றாக தங்கத்தை முதலீட்டாளர்கள் கருது வருகின்றனர் என பொருளாதார வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (கச்சா எண்ணெய், ஈயம், தங்கம் போன்றவை வர்த்தகம் செய்யப்படும் பங்கு சந்தை) கோல்ட் பியூச்சர் 1.51 சதவிகிதம் உயர்ந்து 60 ஆயிரத்து  280 ரூபாய்க்கு வர்த்தகமானது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. 0.87 சதவிகிதம் உயர்ந்து கிலோவுக்கு 69 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் வர்த்தகமானது.


தேசிய பங்குச்சந்தையை பொறுத்தவரையில், 200 புள்ளிகள் சரிந்து 16,900 ஆக வர்த்தகமானது. அதேபோல, மும்பை பங்குச்சந்தை 850 புள்ளிகள் குறைந்து 57,085 ஆக வர்த்தகமானது. இதுகுறித்து மேத்தா ஈக்விட்டிஸ் நிறுவனத்தின் கமாடிட்டி பிரிவு துணை தலைவர் ராகுல் கலந்த்ரி கூறுகையில், "SVC வங்கி மற்றும் பிற வங்கிகளின் திடீர் வீழ்ச்சிக்குப் பிறகு ஆபரணம் முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது.


அமெரிக்க பத்திர விகிதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனத்தைக் கண்டுள்ளன. டாலர் குறியீடு சரிந்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்தன. வங்கி நெருக்கடி மற்றும் முரண்பட்ட அமெரிக்க பொருளாதார பார்வையில், மத்திய வங்கி இந்த வாரம் மார்ச் 22 அன்று கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்கை முடிவுகள் தங்க சந்தைகளுக்கு மேலும் வழிகாட்டுதலை வழங்கலாம்.


முதலீடு செய்தவற்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ள தங்கம்:


முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான சொத்தாக விளங்கும் தங்கம் தற்போது மிகவும் சாதகமான நிதி மற்றும் பொருளாதார நிலையில் உள்ளது. இன்றைய நாள் முடிவில் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானால் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதாவது, 2,070 மற்றும் 2,188 அமெரிக்க டாலர்களுக்கு மத்தியில் வர்த்தகம் ஆகலாம்" என்றார்.


இதுகுறித்து ஐஐஎஃப்எல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் நாணய ஆராய்ச்சி பிரிவு துணை தலைவர் அனுஜ் குப்தா கூறுகையில், "எதிர்பார்த்தது போலவே கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் உயர்வை கண்டோம். 


எம்சிஎக்ஸ் தங்கம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.59,461க்கு வர்த்தகம் ஆனது. சர்வதேச சந்தையில், 6.49 சதவீதம் அதிகரித்து, 1,988 டாலர் அளவில் வர்த்தகம் நிறைவு பெற்றது" என்றார்.


இதையும் படிக்க: TN Budget Highlights: தமிழ்நாடு பட்ஜெட்டில் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவிப்புகள் என்னென்ன?