தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான தொழில்கள் முடங்கின. கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்த சூழலில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது பெரிந்து குறைந்திருக்கிறது. இதனால் பல்வேறு தொழில்களும் படிப்படியாக மீண்டு பொருளாதார ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் கட்டுமானப் பணிகள் சூடுபிடித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் விலை திடீரென 70 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் அதன் தொடர்புடைய எரிபொருட்கள் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான விலையேற்றம் கண்டுள்ளது. ‘பெட் கோக்’ என்ற மாற்று எரிபொருள் முற்றிலுமாக கிடைப்பதே இல்லை. தற்போது லாக்டவுன் பல நாடுகளில் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் சரக்கு கப்பல்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 



விலை உயர்ந்த நிலக்கரியும் கிடைப்பது இல்லை. அதே வேளையில் நிலக்கரி மற்றும் ‘பெட் கோக்’ விலை இன்னமும் அதிகமாக வரும் நாட்களில் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையால் சிமெண்ட் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிமெண்ட் உற்பத்தி செலவு ஒரு மூட்டைக்கு ரூ.60 வரை உயரலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் எரிபொருள் செலவு எவ்வளவு உயரும் என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளதாக கூறுகிறார்கள். அதேபோன்று சிமெண்ட் உற்பத்தி திறனை முன்பை போலவே எந்த அளவுக்கு எட்ட முடியும் என்பதை தீர்மானிக்கவும் முடியவில்லை என அச்சத்துடன் கூறுகிறார்கள் சிமெண்ட் உற்பத்தியாளர்கள்.



இது குறித்து தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளா்கள் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "சிமென்ட் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிலக்கரி, பெட்ரோலிய எரிபொருளான பெட் கோக் ஆகியவற்றின் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அவற்றுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிமென்ட் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருள்களின் விலை உயா்வால் ஒரு மூட்டை சிமென்ட் உற்பத்தி செய்ய ரூ.60 கூடுதல் செலவாகிறது. இனி வரும் நாள்களில் எரிபொருளுக்கான செலவு, மொத்த உற்பத்தித் திறன் ஆகியவை அதிகரிக்குமா என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சிமெண்ட்டின் தரம் குறையாமல், சந்தையில் சிமெண்ட் தட்டுப்பாடு வராமல் பாதுகாக்க சிமென்டின் விலையை ஏற்றும் முடிவில் இருக்கிறோம். இந்த தட்டுப்பாட்டின் காரணத்தால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை எங்களுடன் சிமெண்ட் உபயோகிப்பாளர்களும் பங்குகொள்ள வேண்டி இந்த முடிவினை எடுத்துள்ளோம்." இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த கட்டுமானத் துறையினர் உடனே தமிழக அரசிடம் முறையிட்டனர். இதையடுத்து சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து, 60 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. அதாவது ஒரு மூட்டை சிமெண்ட் 500 ரூபாயாக இருந்த சூழலில், 440 ரூபாயாக குறைந்தது. இது ஓரளவு ஆறுதலை அளித்த நிலையில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.