Union Budget 2024: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்:


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். மோடி அரசாங்கத்தின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள ஏழாவது தொடர்ச்சியான பட்ஜெட் இதுவாகும். மேலும் மோடி 3.0 அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பட்ஜெட் பொது மக்கள், தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் நிபுணர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.  பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கிய நிலையில்,  ஆகஸ்ட் 12, 2024 வரை நடைபெற உள்ளது. திங்களன்று, நிதியமைச்சர் பொருளாதார ஆய்வு 2024ஐ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இது மறுஆய்வுக் காலத்தில் பொருளாதாரத்தின் செயல்பாட்டின் ஆழமான விளக்கியதோடு,பட்ஜெட்டின் முன்னுரிமைகள் மற்றும் கவனம் செலுத்தும் பகுதிகளையும் காட்டியது.


தனிநபர்கள் எதிர்பார்ப்பு:


தனிநபர்களை பொருத்தவரை, வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?, வருமான வரி அடுக்குகளில் மாற்றம் ஏற்படுமா? ஜிஎஸ்டி வரி விகிதங்கள் திருத்தப்படுமா? வீட்டு கடன்களுக்கான சலுகைகள் உயருமா? நிலையான கழிவுத்தொகை உயர்த்தப்படுமா? வீட்டு வாடகை அலவன்ஸ் உயருமா? நீண்ட கால முதலீடுகளுக்கான வட்டி வருமானத்திற்கு விலக்கு கிடைக்குமா? போன்ற ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.


தொழிதுறையின் எதிர்பார்ப்புகள் என்ன?


உற்பத்தித் துறையானது வேலைவாய்ப்பை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதால் பொருளாதார வளர்ச்சியை உந்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கணிசமான முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை வளர்ப்பது, நுகர்வைத் தூண்டுவது மற்றும் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஏற்றவாறு வலுவான ஆதரவு மற்றும் கொள்கைகள் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு பட்ஜெட்டில் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பது கட்டாயமாகும்.


கார்ப்பரேட் வரிச் சலுகைகளை நீட்டித்தல், கூடுதல் கட்டணங்களை நீக்குதல் மற்றும் பிற ஒழுங்குமுறை மாற்றங்களை உள்ளடக்கிய சீர்திருத்தங்களை ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்க்கிறது. தொழில்துறையில் பங்குதாரர்கள் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கான தங்கள் எதிர்பார்ப்புகளையும் முன்னுரிமைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


பல்வேறு துறைகளில் உள்ள பொதுவான எதிர்பார்ப்புகள், நெகிழ்வான டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பின் வளர்ச்சி, இணக்கத்தை ஊக்குவிப்பதற்காக எளிமைப்படுத்தப்பட்ட வரி கட்டமைப்புகள், சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் கல்வியில் கலப்பின கற்றல் மாதிரிகளுக்கான பரிந்துரைகள், மற்ற முன்னுரிமைகள் ஆகியவை அடங்கும்.


நேரலையில் பார்ப்பது எப்படி?


தூர்தர்ஷன், பார்லிமென்ட் சேனல்கள் மற்றும் இந்திய அரசின் யூடியூப் தளம் உட்பட பல்வேறு அரசு சேனல்களில் பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்வை சன்சாத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பும். அதிகாரப்பூர்வ இணையதளம், www.indiabudget.gov.in , ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணைப்பை ஹோஸ்ட் செய்யும், இதில் பயனர்கள் பட்ஜெட் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அணுகலாம்.


பொருளாதார அறிக்கை சொன்னது என்ன?


2023-24 நிதியாண்டில் 8.2 சதவீத உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை அடைந்து, கணிசமான உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார சவால்களை சமாளித்து, இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது என்று பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. FY24 முழுவதும் முக்கிய பணவீக்கம் குறைந்துள்ளது, இதன் விளைவாக சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கம் FY25க்கு 4.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில்,  இந்த எண்கள் வரவிருக்கும் பட்ஜெட் 2024 இல் இருந்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மேலும் அதிகரித்துள்ளன..