பாதுகாப்புத் துறையில் தற்சார்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இலக்குகளை அடைய இந்தியா கொண்டிருக்கும் திட்டம், துணிச்சலான ஒன்றாக பார்க்கப்படுகிறது.


பாதுகாப்பு துறையில் இந்தியாவின் இலக்கு: ஆனால், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான பெரிய இலக்குகளை இந்தியாவால் அடைய முடியுமா என்பதுதான் முக்கிய கேள்வி. 2028-29 ஆம் ஆண்டிற்குள் வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தியை 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும், ஏற்றுமதியை இருமடங்காக அதாவது 50,000 கோடி ரூபாயாகவும் உயர்த்துவதை இலக்காக கொண்டுள்ளது.


2023 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு ரூ.1.09 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024 நிதியாண்டில் ரூ.74,739 கோடியாக குறைந்தது. 2023 நிதியாண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க உற்பத்தி ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியதைத் தொடர்ந்து, இந்த சரிவு ஏற்பட்டது.


எதிர்பார்ப்புகளை கிளப்பும் மத்திய பட்ஜெட்: பாதுகாப்பு துறையில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ. 16,411 கோடியாக உயர்ந்தது. அதாவது, இது 2024 நிதியாண்டில் மொத்த பாதுகாப்பு உற்பத்தியில் 22 சதவிகிதம் ஆகும். 


கடந்த நிதியாண்டான 2023-24இல் பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.25 லட்சம் கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23 நிதியாண்டில் ஆயுதங்களை நவீனமயமாக்கவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 


கடந்த நிதியாண்டை விட, இடைக்கால பட்ஜெட்டில் 6 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, 1.62 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2020 நிதியாண்டை ஒப்பிடுகையில் 57 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டது.