நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்த உள்ளார். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு வரும் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் நாளை மத்திய பட்ஜெட் 2022-23 தாக்கல் செய்யப்பட உள்ளது. 


இந்நிலையில் இந்தக் கூட்டத் தொடருக்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “இந்தக் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் விரிவான ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பட்ஜெட் தொடர் முக்கியமான நேரம். மத்திய நிதிநிலை அறிக்கை உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்” எனப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.