மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சக்தி இயக்கம், வாத்சல்யா மற்றும் ஊட்டச்சத்து 2.0 ஆகிய மூன்று திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8- 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


அதைத் தொடர்ந்து இன்று (பிப்.1) மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அதில், ''வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்டாக இது இருக்கும். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமையும். 


பெண்களின் வலிமையே நம்முடைய ஒளிமயமான எதிர்காலத்துக்கு முன்னோடி. பெண்களை மையப்படுத்திய வளர்ச்சிக்காக, சக்தி இயக்கம், வாத்சல்யா மற்றும் ஊட்டச்சத்து 2.0 என்கிற மூன்று திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல சாக்‌ஷம் அங்கன்வாடி திட்டமும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. 




சாக்‌ஷம் அங்கன்வாடிகள், புதிய தலைமுறை அங்கன்வாடிகள் ஆகும். நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் சிறப்பான கட்டமைப்பைப் பெற்றுள்ள அங்கன்வாடிகள் இவை. ஆரம்பகட்ட குழந்தைப்பருவ வளர்ச்சிக்காக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் நலனை மேம்படுத்த, 2 லட்சம் அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன என்று  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


சாக்‌ஷம் அங்கன்வாடி திட்டத்துடன் ஊட்டச்சத்து 2.0 திட்டம் இணைந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களுக்கான நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.20,105 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. முன்னதாகக் கடந்த ஆண்டு இந்தத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண