அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புகளை சரண் செய்யும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதன்மூலம் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து, பணப் பலன் பெறலாம். கொரோனா காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசின் கடைசி தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, ’’கோவிட் பெருந்தொற்று பரவி இருந்த காலத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெருஞ்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு அலுவலருக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
01-04-2026 முதல் சரண் செய்யலாம்
அவற்றைக் கனிவுடன் பரிசீலித்து, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 01-04-2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்.
இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு அலுவலர் நலன் காக்கும் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் ஒன்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவானது?
எனினும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பல்லாண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல கல்விக் கடன் ரத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளன.