Defence Budget 2024: பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், பாதுகாப்பு துறைக்காக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


இடைக்கால பட்ஜெட் 2024:


பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் இடைக்கால பட்ஜெட், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் தனிநபர் வருமான வரி வரம்ப அதிகரிப்பதை தொடங்கி, தொழில் முனைவோருக்கான சலுகைகள் என, நடுத்தர வர்கத்தினர் தொடங்கி தொழில் நிறுவனங்கள் வரையிலும் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. அதேநேரம், நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றான பாதுகாப்பிற்கும் எந்த அளவிற்கு, நிதி ஒதுக்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில், பாதுகாப்பு துறைக்காக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


10 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்: 



  • 2023/24க்கான பாதுகாப்பு பட்ஜெட் மதிப்பு முந்தைய ஆண்டிலிருந்து 12.95 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதாவது  ரூ. 5.25 லட்சம் கோடியிலிருந்து ரூ. 5.94 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. புதிய போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டாங்கிகள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுத அமைப்புகளை ராணுவம் உருவாக்க அல்லது வாங்க அனுமதிக்கும் வகையில் இது செய்யப்பட்டது. ஆயுதப் படைகளின் நவீனமயமாக்கல் பட்ஜெட்டும் ரூ. 1.52 லட்சம் கோடியிலிருந்து ரூ. 1.62 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.

  • 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு ரூ.5,25,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23ல் பாதுகாப்புத் துறைக்கான மூலதன கொள்முதல் பட்ஜெட்டில் 68 சதவீதம் உள்ளூர் தொழில்துறைக்கு ஒதுக்கப்படும் என்று சீதாராமன் கூறியிருந்தார். இது, நாட்டின் பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக தெரிவிக்கப்பட்டது.


  • 2021 ஆம் ஆண்டில் பாதுகாப்பு துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 4,78,196 கோடி ஒதுக்கப்பட்டது.  திருத்தப்பட்ட செலவினம் ரூ. 5,35,508 கோடியை எட்டியது. இது அந்த ஆண்டிற்கான மத்திய அரசின் செலவில் 14.20 சதவீதமாகும். 

  • 2020-21 நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் முதலில் ரூ. 4,71,378 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அது ரூ. 5,23,330 கோடியை எட்டியது. சீனாவுடனான எல்லைக் கோட்டில் உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியது. இந்த தொகை மத்திய அரசின் மொத்த செலவில் 14.91% ஆகும். கூடுதலாக, ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடு ரூ. 1,33,825 கோடியை எட்டியது, இது முந்தைய ஆண்டில் ரூ. 40,367.21 கோடியாக மட்டுமே இருந்தது.

  • 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.3.18 லட்சம் கோடியாக இருந்தது. இதில் ரூ.1,03,394 கோடி மூலதனச் செலவு அடங்கும் . இடைக்கால பட்ஜெட்டை முன்னாள் நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். உண்மையான செலவு இந்த மதிப்பீட்டை தாண்டி, அந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கான செலவு ரூ.5,23,330 கோடியை எட்டியது.

  • 2018 ஆம் ஆண்டில், 2018-19 ஆம் ஆண்டில் ராணுவ செலவினங்களுக்காக இந்தியா ரூ.2.95 லட்சம் கோடியை ஒதுக்கியது, இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 7.8% அதிகம். பட்ஜெட்டில் புதிய ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளை வாங்குவதற்கு ரூ.99,563 கோடி முதலீடு செய்யப்பட்டது .

  • 2017 ஆம் ஆண்டில், இந்தியா தனது பாதுகாப்பு செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை 6% வரை உயர்த்தி, நவீனமயமாக்கலுக்காக ரூ. 86,488 கோடி உட்பட ரூ. 2.74 லட்சம் கோடியாக அறிவித்தது. இருப்பினும், உண்மையான செலவுகள் ரூ. 4,17,242 கோடியை எட்டியது. இது மத்திய அரசின் செலவில் 19.48 சதவீதமாகும்.

  • 2016-17 நிதியாண்டில் பாதுகாப்பு துறைக்குரூ. 2.58 லட்சம் கோடி செலவழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இது முந்தைய ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 9.7% குறைந்துள்ளது. பட்ஜெட்டில் ராணுவ நவீனமயமாக்கலுக்கு மட்டும் ரூ. 87,209.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  •  2015-16 ஆம் ஆண்டிற்கான செலவினத்தை ரூ.2,46,727 கோடியாக அறிவிக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளை விட 7.7% மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கு எதிராக கணக்கிடப்பட்டால் 10.95% அதிகரித்து இருந்தது. இது புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான ரூ.94,588 கோடியை உள்ளடக்கியது.

  • மோடி அரசின் முதல் பட்ஜெட்டில், பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த அருண் ஜேட்லி முன்மொழிந்ததால், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் அரசு முக்கியத்துவம் அளித்தது. எல்லைப் பகுதிகளில் ரயில்வே மேம்பாட்டிற்காக ரூ. 1,000 கோடி உட்பட, பாதுகாப்புக்கான மூலதனச் செலவீனத்தை ரூ.5,000 கோடியாக உயர்த்தப்பட்டது. .ராணுவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர, நாட்டில் பாதுகாப்புத் தொழில் தளத்தை விரிவுபடுத்துத இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.