நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ள மோடி அரசு 3வது முறையாக ஆட்சி செய்த பிறகு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இதுவாகும்.


குறையும் செல்போன், புற்றுநோய் மருந்துகள், தங்கம் விலை:


நாடே எதிர்பார்த்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மருத்துவம், செல்போன், தங்கம், வெள்ளி, தோல், கடல் உணவுகள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் இனி வரும் நாட்களில் புற்றுநோய்க்கான மருத்துவ பொருட்கள், செல்போன்கள் ஆகியவற்றின் விலை குறைய உள்ளது.


மேலும், சாமானியர்களின் பொக்கிஷம் மற்றும் தேவையாக கருதப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் தங்கம் விலையும் குறைந்துள்ளது. மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் தங்கம், செல்போன் மற்றும் உயிரைக் கொல்லும் நோயான புற்றுநோய்க்கான மருந்து விலை குறைந்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நான்கு மாநில தேர்தல்:


மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து மூன்று மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் இது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் தனிப்பெரும்பான்மையை தரும் என்று எதிர்பார்த்த மத்திய அரசுக்கு ஏமாற்றம் தரும் நிலையில், வட இந்தியாவில் பல இடங்களில் பா.ஜ.க. அரசுக்கு சறுக்கல் ஏற்பட்டது.


இந்த நிலையில், கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க. அரசு இந்தாண்டு இறுதியில் மகாராஷ்ட்ரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது. இதில், மகாராஷ்ட்ரா மாநிலம் மிக மிக முக்கியமான மாநிலம் ஆகும்.


இடைத்தேர்தலில் பின்னடைவு:


நாட்டிலே மிகவும் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ராவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பிடிக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், சிவசேனாவின் உள்கட்சி பிளவால் உத்தவ் தாக்கரேவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வுக்கு இது பின்னடைவாகும்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ள ஹேமந்த் சோரனின் செல்வாக்கும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. போராடி வருகிறது. ஹரியானாவில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வை மீண்டும் கைப்பற்ற முயற்சி எடுக்கும்.


மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டசபைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் 10 இடங்களில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.


வாக்காளர்களை கவர வியூகமா?


இதனால், நான்கு மாநில தேர்தல் முடிவுகளில் இந்தியா கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தினாலோ ஆட்சியை கைப்பற்றினாலோ பா.ஜ.க. கூட்டணிக்கு மேலும் நெருக்கடி ஆகும். இதனால், நான்கு மாநில தேர்தல்களில் குறிப்பாக மகாராஷ்ட்ரா தேர்தலில் மக்களை கவர்வதற்காகவே இந்த முறை பட்ஜெட்டில் மக்களை கவரும் சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.