நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, விடிய, விடிய நடந்த ஆடு வியாபாரத்தால், எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச் சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் விடிய, விடிய ஆடுகள் வியாபாரம் நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு பின்னர் தற்பொழுது தான் மீண்டும் வழக்கமான விற்பனைக்கு சந்தை திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 




தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. விவசாயிகளிடம்  இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும்  வெள்ளாடு, சீனி வெள்ளாடு செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்,  வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு  மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். சாதாரண வாரங்களில் ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும். பொங்கல் தீபாவளி, பக்ரீத், ரம்ஜான் ,கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்களில் 4 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பது வழக்கம்.




இந்நிலையில் வரும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று இரவு முதல் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சரிவர ஆடுகள் விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகளவு ஆடுகள் வரத்தும் இருந்தன, விற்பனையும் இருந்தது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 8,000 ரூபாயும் , ஜோடி ஆடு 15 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக செம்மறி ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது.




நேற்று இரவு தொடங்கி இன்று விடிய, விடிய தொடர்ந்த விற்பனை நடைபெற்றது.  இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண