Adhani Share: அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 10 சதவீதம் சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை


அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்தது.


ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி குழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்தனர்.  ஆனால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையீட்டு இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தது. 


திடீர் சரிவு


அதனால் அதானி குழுமத்தின் பங்குகள் சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்தன. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் திடீரென அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.  மொத்தமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இன்று மட்டும் 10 சதவீதம் குறைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே நாளில் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 


காலை 11.11 மணியளவில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 8.92 சதவீதம் குறைந்து ரூ.2,182.10-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதானி போர்ட்ஸ் 4.8 சதவீதம் சரிந்து ரூ.709.75 ஆக இருந்தது. அதானி பவர் 5.12 சதவீதம் சரிந்து ரூ.243.65 ஆக இருந்தது. அதானி டிரான்ஸ்மிஷன் 6.88 சதவீதம் குறைந்து ரூ.749.50 ஆக இருந்தது. அதானி க்ரீன் எனர்ஜி 2.6 சதவீதம் குறைந்து ரூ.948.75க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதானி வில்மர் 2.98 சதவீதம் சரிந்து ரூ.405.90 ஆக இருந்தது. இதன் மூலம் அதானி குழுமத்திற்கு ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகல் முதலீட்டளார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


என்ன காரணம்?


இன்று அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் சில அரசு அமைப்புகள் துவங்கியுள்ள விசாரணையின் மூலம் அதானி பங்குகள் இன்று பெரிய அளவில் சரிந்துள்ளதாக தெரிகிறது. அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சரிந்த பங்குகள் மதிப்பு எப்படி உடனேயே உயரும் என்று சந்தேகத்தின் பேரில் சில அமைப்புகள் விசாரணைகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது.  ஆனால் இந்த விசாரணை குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


ஆதனின் பொம்மை நாவலை எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய பாலபுரஸ்கார் விருது அறிவிப்பு...!