Paytm: 1000-க்கும் மேற்பட்ட பயனர்கள் ஒரே பான் கார்டு எண்ணை தங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,  பேடிஎம்-ஐ பயன்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.


பேடிஎம் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட ஆர்பிஐ:


வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துவது, டிக்கெட் புக் செய்வது, ரீசார்ஜ்கள் என அனைத்திற்குமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு விகிக்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.


இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.


இந்த வங்கி மீது எழுந்த புகார்களை தொடர்ந்து ரிசர்வ் வங்கி அதனை முடக்கியது. இதில் பேடிஎம் பேமன்ட் வங்கியில் விதிகள் சில மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, பேடிஎம் பேமன்ட் வங்கியில்  பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கு வரும் 29ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.


என்ன காரணம்?


ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிறுவனத்தின் சில விதிமீறல்கள் நடந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, ரிசர்வ் வங்கியும், தணிக்கை குழுவின் சரிபார்ப்பு செயல்முறையின்போது, பேடிஎம் வங்கி சமர்பித்த தகவல்கள் பல இடங்களில் தவறாக இருப்பதாக கண்டறியப்பட்டது. பேடிஎம் குழுமத்திற்குள் மற்றும் குழுமத்துக்கு தொடர்புடையவர்களுக்குள் நடந்த பணப் பரிவர்த்தனை வெளியிடாதது ரிசர்வ் வங்கிக்கு சந்தேகத்தை எழுப்பியது.


மேலும்,  தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷ்னல் நிறுவனத்துடனான தொடர்பில், பேடிஎம் வங்கி நிறுவனத்தில் சில விதிமீறல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  இதோடு இல்லாமல், 1000க்கும் மேற்பட்ட பயனர்கள்  ஒரே பான் கார்டு எண்ணை தங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்திருப்பதும் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைக்கு முக்கிய காணரமாக இருப்பதாக தெரிகிறது. 


கேஓய்சி விதிமீறல்களால் கோடிக்கணக்கான ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியில் சட்டவிரோத நடவடிக்கைக்கான ஆதாரம் கிடைத்தால் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தும் என வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.


கட்டுப்பாடுகள் என்னென்ன?


வாலட் உள்பட எந்த பண பரிமாற்றங்களும் அனுமதிக்கப்படாது. ஆனால், பேடிஎம் கணக்குகளில் ஏற்கனவே இருக்கும் பணத்தை திரும்ப எடுக்கவும் பயன்படுத்தவும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35A மற்றும் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி Paytm Payments வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பண பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது


. ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.