பயணிகள் வாகன பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது மாருதி சுசூகி. ஆனால் மற்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் நுழைத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துவருகின்றன.  டாடா, டிவிஎஸ், மஹிந்திரா, பஜாஜ், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தையில் புதிய புராடக்ட்களை அறிமுகம் செய்துவருகின்றன. இதுவரை எலெக்ட்ரிக் வாகனம் குறித்து தெளிவான அறிக்கையை விடாத மாருதி தற்போது 2025-ஆம் ஆண்டுக்கு பிறகு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு வருவோம் என தெரிவித்திருக்கிறது.


தயக்கத்துக்கு என்ன காரணம்?


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கார்கள் பிரிவில் ரூ. 5 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் கார்கள் அதிமாக விற்பனையாகின. ஆனால் தற்போது ஐந்து லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான கார்கள் அதிகம் விற்பனையாகின்றன. கார்களின் மொத்த விற்பனையில் 70 முதல் 80 சதவீதம் வரை 10 லட்ச ரூபாய் கார்கள்தான் உள்ளன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை என்பது 10 லட்சத்துக்கு மேல்தான் தயாரிக்க முடியும் என்பதால் மக்களால் வாங்க முடியாது என மாருதி தெரிவித்திருக்கிறது. தவிர பல விஷயங்களை கவனிக்க வேண்டும், பேட்டரி, விலை, சார்ஜ் ஏற்றும் மையம் என பெரிய அளவுக்கு கட்டுமானம் இருந்தால் மட்டுமே எலெக்ட்ரிக் வாகன துறையில் ஈடுபட முடியும் என இதுவரை கூறிவந்தது.




2019-ஆம் ஆண்டு வேகன்ஆர் காரினை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றுவதற்கு திட்டமிட்டது. 2020-ம் ஆண்டு வெளியிடவும்  முடிவெடுத்தது. ஆனால் இந்த மாடல் காரினை பெரிய அளவில் விற்க முடியாது என்னும் காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளிவைத்தது. ஆனால் தற்போது 2025-ம் ஆண்டுக்கு பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடலாம் என நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்திருக்கிறார்.


2025-ம் ஆண்டு!


நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்திருக்கிறார். பெட்ரோல் / டீசல் விலை அதிகரித்தாலும் சிஎன்ஜி வாகனங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம். சுமார் 2 லட்சம் கார்களுக்கான தேவை இந்த பிரிவில் இருக்கிறது. மாருதி நிறுவனத்தால் மாதம் 500 அல்லது சில ஆயிரம் எண்ணிக்கையில் கூட எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடியும். ஆனால் மாருதியின் மொத்த விற்பனையில் இது மிகவும் குறைவு.


மாருதி ஆண்டுக்கு 20 லட்சம் கார்களை விற்பனை செய்கிறது. இதில் 1 லட்சம் வாகனங்கள் கூட எலெக்ட்ரிக் வாகனங்களாக இல்லை என்றால் அது எங்களுக்கு திருப்தியை தராது. இதுவரை மாருதியின் அனைத்து மாடல்களுக்கும் பெரிய சந்தை இருக்கிறது. அதேபோன்ற தேவையை எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவுக்கும் உருவாக்க இருக்கிறோம். அதனால் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் இறங்க மாட்டோம் என்று சொல்லவில்லை. 2025-ம் ஆண்டுக்கு பிறகுதான் இந்த பிரிவில் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என ஆர்.சி. பார்கவா தெரிவித்திருக்கிறார்.


மூன்று ஆண்டுகள்  என்பது தொழில்துறையில் மிகப்பெரிய காலம். அப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையும் சந்தையும் பெரிதாக இருக்கலாம், டாடா உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் பெரும் சந்தையை பிடித்திருக்கலாம், போதுமான கட்டுமானம் உருவாக்கபப்ட்டிருக்கலாம். அப்போது சந்தைக்கு வரும் மாருதியின் தன் வசம் உள்ள பலம் மற்றும் சூழ்நிலையை உபயோகித்து எலெக்ட்ரிக் வாகன சந்தையை கைப்பற்றப்போகிறதா அல்லது இந்த பிரிவை மற்ற நிறுவனங்களிடம் இழக்கப்போகிறதா?
சமயங்களில் ஒரு துறையில் முதலில் நுழையும் நிறுவனத்தை விட கடைசியாக நுழையும் நிறுவனம் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. உதாரணத்துக்கு கூகுள் நிறுவனத்துக்கு முன்பு கூட சர்ச் என்ஜின்  நிறுவனங்கள் இருந்தன. ஆனால் கூகுள் பெரிய வெற்றியை பெற்றது.


மாருதியின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: 


Puneeth Rajkumar Death: புனீத் ராஜ்குமார் மரணம் : நேரலையில் கண்ணீர்விட்டு கதறிய செய்தி வாசிப்பாளர்.. 


Car loan Information:

Calculate Car Loan EMI