தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் என்றும், தெற்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள்.மகாபாரத கதையின்படி அம்பு படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் மகரதமாதம் என்று அழைக்கப்படும். தைமாதம் பிறந்து தான் உயிர்நீத்தார் என்று கூறுகிறது.  மேலும் தைமாதம் முதல் நாள் மகர மாதபிறப்பின்போதுதான் தமிழ்நாட்டில் தைபொங்கல் கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர். மேலும் இந்த காலத்தில் தான் சூரியன் உக்கிரம் ( வெயில் தாக்கம் ) தொடங்குகின்றது.  



இந்த நிலையில்தான்  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயண புண்ணிய காலம், திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சன்னதியில்  உள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம்.


அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சமேத  உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாருக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் அண்ணாலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் சமேத உண்ணமுலை அம்மனுடன் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளி,சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் காலை 7.15 மணிக்கு தனூர் லக்கினத்தில்  உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றும் விழா நடைபெற்றது.




இன்று உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலையிலும்  மாலையிலும் என இரு வேலைகளிலும் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.இதனையடுத்து 10ம் நாளான தை மாதம் முதல் தேதி ஜனவரி 14ம் தேதி அன்று தாமரை குளத்தில் தீர்த்தவாரியோடு இவ்விழா நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றம் விழாவில் தற்பொது கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். கொடியேற்ற விழா முடிந்ததும், வழக்கம் போல பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதித்தனர்