வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க அகழியுடன் கூடிய வேலூர் கோட்டை. 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையினுள் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோட்டை அகழியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து.




அதன் காரணமாக கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் வளாகத்தில் தண்ணீர் புகுந்தது. நாளடைவில் வெளியேறிவிடும் என கருதப்பட்ட தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்தாலும், கோவில் வளாகத்தில் இருந்து அகழிக்கு செல்லும் கால்வாயில் நீர் திரும்பி கோவிலுக்குள் வந்ததன் காரணமாகவும், கோவிலில் உள்ள கிணறு மற்றும் குளங்களில் உபரி நீர் வழிந்தோடி கோவில் வளாகத்தில் சுமார் 2 அடி வரைக்கும் தண்ணீர் தேங்கியதாக கூறப்பட்டது. 




மேலும் கோட்டை அகழியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதற்காக அக்காலகட்டத்திலேயே அமைக்கப்பட்ட வடிநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் மறைத்திருந்ததால் அகழி நீரை வெளியேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியோர் பலமுறை முயன்றும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 




இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள நீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக இப்பணி தொடர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முழுவதுமாக தண்ணீர் வெளியேறி கோவில் வளாகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தண்ணீர் வளாகத்திற்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நேற்றுவரை ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழு தண்ணீரும் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் தரிசிக்க அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 




கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குடும்பத்தோடு வந்து ஜலகண்டேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களும் தரிசித்து செல்கின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று என்பதால் இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் கோட்டை அகழியில் தேங்கியுள்ள உபரி நீரை வெளியேற்றும் பணியில் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தினரும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.