நாம் தீபாவளியை வரவேற்று கொண்டாட காத்திருக்கின்றோம். இந்த தருணத்தில் தீபாவளி பண்டிகையை பற்றியும், நோன்பு முறைகளைப் பற்றியும், நா இன்ம் இந்தப் பதிவில் காணப்போகிறோம்.தீ பாவளி. தீப ஒளி என்பது தான் இதற்கு அர்த்தம். தீபங்களை ஏற்றி அதில் வரும் ஒளியின் மூலமாக இருள் விலகும். அது போல நம் மனதிலுள்ள தீமை என்னும் இருள் நீங்கி நன்மை என்னும் பிரகாச ஒளிபெற தீபாவளியை கொண்டாடுகிறோம். தீபாவளி அன்று கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது பெண்களுக்கான விரதம். இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது? இதை பெண்கள் கடைப்பிடிப்பதாக காரணம் என்ன? இந்த விரதத்தின் வரலாறு என்ன? இப்படிப்பட்ட பல கேள்விகள் நம்மில் உண்டு. 


பொதுவாக கேதார கௌரி நோன்பு என்பது 21 நாட்கள் கடைபிடிக்கப் படுகிறது. ஆனால், அது எல்லா பெண்களாலும் செய்ய இயலாது. ஏனென்றால் 21 நாட்கள் உண்ணாமல் நோன்பு மேற்கொள்ளும் அளவிற்கு அவர்களின் உடல்நிலை ஒத்துழைக்காது. அது போன்றவர்கள் 21வது நாளின் முடிவில், அதாவது தீபாவளி அமாவாசை அன்று நோன்பு இருந்து விரதத்தை கடைபிடிக்கலாம். நாம் செய்யும் பலகாரத்துடன், நோன்பு கயிறு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் அம்பாளுக்கு படைத்து பூஜையை செய்து வழிபடலாம்.




 பெண்கள் ஏன் இந்த நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். இதை அறிந்து கொள்ள ஒரு சிறிய கதையும் உண்டு. கயிலை மலையில் ஒருநாள் எல்லா சித்தர்களும், ஞானிகளும், முனிவர்களும் சேர்ந்து சிவபெருமானையும், பார்வதியையும் வணங்குகின்றனர். அதாவது, சிவன், பார்வதி இருவரையும் சேர்த்து வைத்து பிரதக்ஷணம் செய்து வழிபடுகிறார்கள். அதில் பிருங்கி முனிவர் என்பவர் மட்டும் வண்டு உருவில் மாரி பார்வதி தேவியை விட்டுவிட்டு சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார். இதனைக் கண்டு கோபமடைந்த பார்வதி தேவி, சிவபெருமானிடம் கூறுகிறார் ,பிருங்கி முனிவர் செய்ததை என்னால் ஏற்க முடியாது.




உங்களோடு நான் இணைந்து இல்லாததால்தானே இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுகிறது. இனி உங்களில் சரிபாதியாக நான் இருப்பேன் என்று கூறி பூலோகம் வந்து அடைந்து, கடும் தவம் மேற்கொண்டு, நோன்பு இருந்து, சிவனின் உடலிலேயே பாதியாக கலந்து அர்த்தநாரீஸ்வரராக மாறிய நாளைத்தான் நாம் கேதார கௌரி நோன்பாக கொண்டாடுகிறோம்.


அம்பாளே தன் கணவனுடன் சேர்வதற்கு இந்த நோன்பை மேற்கொண்டிருக்கிறார். ஆகவே, பெண்கள் இந்த நோன்பை கடைபிடித்தால் தங்கள் கணவருடன் சேர்ந்து வாழவும், கணவரின் ஆயுள் நீடிக்கவும், குடும்பத்தில் அமைதி, செல்வம், பெருகவும் இந்த நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுதான் கேதாரகௌரி நோன்பின் நம்பிக்கை