திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்தது. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சிறிது நாட்களுக்கு பிறகு கூட்டம் சிறிது அதிகரித்து, உண்டியல் வசூலும் கூடியது. கொரோனா இரண்டாவது அலை தாக்கதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு உள்ளூர் மக்களுக்கு மட்டும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில், நாளை முதல் அனைத்து மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலில் இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 2000 இலவச தரிசன டிக்கெட்டுகள், 8,000 இலவச டிக்கெட்டுகளாக  ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் ஏழை பக்தர்கள் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க முடியுமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






 


முன்னதாக, திருப்பதியில் நேரில் வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக இலவசமாக டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில்  அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறினார்.


மேலும், அடுத்தாண்டு நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது கோயிலில் தினமும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.


முன்னதாக, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என்றும், பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தினத்தை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக திமுக எம்எல்ஏ நியமனம்!