தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு புரட்டாசி ராபி பருவத்தில் மானாவாரி நிலங்களில் முதல் வாரத்திலேயே பருவமழை முன்கூட்டி துவங்கிவிடும் எனக் கருதிய விவசாயிகள் ஆவணி மாதக்கடைசியில் இருந்து புரட்டாசி 10 ந் தேதி வரை ஒன்றன்பின் ஒன்றாக உளுந்து, பாசி, பருத்தி,மக்காச்சோளம், கம்பு, எள், வெள்ளைச் சோளம், கொத்தமல்லி, கொண்டைக்கடலை. என வரிசையாக பட்டத் தேதிக்கேற்றவாறு விதைப்பு செய்தனர். விதைத்த நாள் முதல் பருவமழை போக்கு காட்டியது சில கிராமங்களில் ஒரளவு மழை பெய்தது. இதனால் பயிர்கள் இருவேறு விதமாக முளைத்துவிட்டது. சிலரது நிலங்களில் விதைகள் மண்ணில் மக்கி கெட்டுப் போய்விட்டது. இதனால் ஒருமுறைக்கு பலமுறை விதைப்பு செய்ய நேரிட்டது. இருப்பினும் பல்வேறு பருவமாற்றங்களுக்கிடையே தற்போது மக்காச்சோளம் முளைத்து நாற்பதுநாள்பயிராக உள்ளது. கூலி ஆட்களை வைத்தும், இராசாயான மருந்து தெளித்தும் களையை அப்புறப்படுத்தி வருகின்றனர்.




கடந்த 2018ம் ஆண்டு துவக்கத்தில் வடமாநிலங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அமெரிக்கன் படைப்புழு எனும் குருத்துப்பூச்சி மக்காச்சோளம் பயிரின் தண்டுப்பகுதியில் உற்பத்தியாக முழுவதுமாக திண்று அழித்துவிட்டதால் கரீப் பருவத்தில் அரசு நிர்ணயித்த மக்காச்சோளம் விளைச்சல் அதன் முழு உற்பத்தி இலக்கை எட்ட முடியவில்லை. அதன்பின் ராபி பருவம் தமிழகத்தில் தொடங்கியது. விவசாயிகள் பெருமளவு மக்காச்சோளம் பயிரிட்டனர். அண்டை மாநிலங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்ட மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் மக்காச்சோளம் பயிரில் அமெரிக்கன் படைப்புழு எனப்படும் குருத்துப்பூச்சி முளைத்து 25 நாட்களேயான மக்காச்சோளம் பயிரில் தண்டை வெட்டி முழுவதுமாக திண்று அழித்துவிட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.




வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். படைப்புழுவை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவிடவும் தமிழக அரசுக்கு அதிகாரிகள் படைப்புழுவில் இருந்து மக்காச்சோளம் பயிரை காப்பாற்றவும் சக்திவாய்ந்த டெலிகேட், கோரஜென் எனப்படும் மருந்துகளை மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் ஏக்கருக்கு 80 மிலி மருந்துடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து தண்டுப்பகுதியில் தெளிக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர். 2018 முதல் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு எனப்படும் குருத்துப்பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது.




இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, 2019ம் வருடம் விவசாயிகளுக்கு குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த மருந்து மானியம் தமிழக அரசு வழங்கியது. அதன்பின் புதிதாக பொறுப்பேற்ற அரசு மக்காச்சோளம் பயிருக்கு மருந்து மானியம் வழங்கப்படவில்லை. அதேவேளையில் படைப்புழுவை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை கூறிவருகிறது. அதிகாரிகள் கூறியபடி செயல் விளக்கம் செய்தால் வரவை மிஞ்சிய செலவாகிறது. இந்தாண்டும் மக்காச்சோளம் பயிரில் தண்டுப்பகுதியில் படைப்புழு அதிகம் தென்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து குருத்துப்பூச்சிமருந்து வாங்கி தெளிக்கின்றனர். அது மட்டுமல்லாது இதர உளுந்து, பாசி, வெள்ளைச் சோளம், பருத்தி போன்ற பயிர்களில் தாக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்தவும் விலை உயர்ந்த மருந்துகளை தெளிக்க வேண்டி உள்ளது. கடந்த ஆட்சியில் உதவியது போல் படைப்புழு கட்டுப்படுத்த மருந்து மானியம் அல்லது இலவச மருந்துகள் வழங்க வேண்டும் என்கிறார்.