தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12 இலட்சம் மதிப்பில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந் திரன் வழங்கினார்.
மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 கீழ், 40 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12 இலட்சம் மதிப்பில் 50 சதவிகித மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா,தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந் திரன் வழங்கினார்.
விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் மேலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 8 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விதைகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.225 மதிப்பிலான காய்கறி விதைதொகுப்புகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.450 மதிப்பிலான பழக்கன்று தொகுப்புகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.900 மதிப்பிலான மாடிதோட்டம் தளைகளையும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.61,575 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், வேளாண்மைத்துறை சார்பில், 13 பயனாளிகளுக்கு ரூ.25,135 மதிப்பிலான மண்புழு உரம் தயாரிப்பதற்கான படுக்கை விரிப்புகள், மிளகாய் வத்தல், நெல், சிறுதானியம், பருத்தி உள்ளிட்ட விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விவசாயிகளுக்கு நேரடியாக வருமானம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ், சில்லறை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.30,000- மதிப்பிலான நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் ரூ.15,000 மானியத்துடன் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வழிகளை உருவாக்குதல், சில்லறை விற்பனையை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு நேரடியாக வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம். அந்த வகையில், 40 பயனாளிகளுக்கு இந்த நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
நன்றி தெரிவித்த விவசாயிகள் ”இத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் நடமாடும் காய்கனிகள் வண்டிகள் பெற்றுள்ளதால், எங்களைப்போன்ற சிறு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கள் மற்றும் கனிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியும் என்றும், ஒரே இடத்தில் அமர்ந்தும், கூடைகளில் சுமந்தும் விற்பனை செய்து வந்த எங்களுக்கு, இந்த நடமாடும் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதால், காய்கனிகளை சிரமமின்றி வேறு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் சென்று விற்பனை செய்து எங்கள் வருமானத்தை பெருக்க முடியும் எனவும், இந்த நடமாடும் வண்டிகளை மானிய விலையில் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றிகளை” தெரிவித்தனர். இந்நிகழ்வில், துணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை) சுபாவாசுகி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அம்சவேணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.