தஞ்சாவூர்: வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படும் பருத்தி பணப்பயிர்களில் முக்கியமானதாகும். பருத்தி விதை முளைப்பிலிருந்து அறுவடை வரை பல்வேறு உயிர் மற்றும் உயிரற்ற தகைப்புகளுக்கு ஆளாகிறது. பருத்தியில் இளம் செடிகளின் வளர்ச்சி மற்றும் அமைப்பு அதன் விளைச்சலை நிர்ணயிக்கிறது. எனவே பாசன வசதி உள்ள இடங்களில் நெல் அறுவடைக்கு பின் தை - மாசி பட்டத்தில் நெல் தரிசு பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.


சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு பின் பாசன வசதி உள்ள இடங்களில் தை- மாசி பட்டத்தில் (ஜனவரி, பிப்ரவரி) நெல் தரிசு பருத்தி சாகுபடி செய்ய ஏற்ற தருணம் ஆகும்.

இதற்கு எம் சி யு 7, எல் ஆர் ஏ 5166, எஸ் வி பி ஆர் 3, 6, கோ 17, சுரபி, சுராஜ் ரகங்கள் ஏற்றது ஆகும். பஞ்சு நீக்காத விதை ஏக்கருக்கு ஆறு கிலோவும், பஞ்சு நீக்கிய விதை ஏக்கருக்கு 3 கிலோவும், விதை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.




விதை நேர்த்தி:

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி என்ற பூஞ்சான மருந்தை கலந்து 24 மணி நேரம் கழித்து ஒரு ஏக்கர் விதைக்கு 200 கிராம் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் உரத்துடன் ஆறிய அரிசி கஞ்சியை கலந்து விதைகளை நன்றாக கலக்கி அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.

நிலம் மெழுகு பதமாக இருக்கும் போது வரிசைக்கு வரிசை 60 சென்டிமீட்டர், செடிக்கு செடி 30 சென்டிமீட்டர் என்ற இடைவெளியில் ஒரு சதுர மீட்டரில் 5-6 செடிகள் இருக்குமாறு விதைகளை ஊன்ற வேண்டும். வறண்ட நிலத்தில் நேரடியாக விதைப்பு செய்ய இயலாது என்பதால் நீர் பாய்ச்சி பின் மெழுகு பதத்திற்கு ஆன பிறகு விதைக்க வேண்டும்.

விதைத்த பத்தாவது நாள் இடைவெளி உள்ள இடங்களில் மீண்டும் விதைகளை ஊன்ற வேண்டும். பஞ்சு நீக்கிய விதை எனில் குழிக்கு ரெண்டு மூணு விதைகள் வீதமும், பஞ்சு நீக்காத விதை எனில் குழிக்கு மூன்று, நான்கு விதைகள் வீதமும் ஊன்ற வேண்டும்.

விதைத்த 20 -25 நாள் களைக்கொத்து அல்லது மண்வெட்டி கொண்டு கொத்தி களைகளை அகற்றி உரம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

 

களைக்கொல்லி இடுவதாயின் பென்டிமெத்தலினை ஒரு ஏக்கருக்கு 1.3 லிட்டர் என்று அளவில் களை முளைப்பதற்கு முன் தெளிக்க வேண்டும். பிறகு 45ம் நாள் ஒரு கைக்களை எடுத்து மண் அணைக்க வேண்டும். களைக்கொல்லி இடாத நிலையில் 20 மற்றும் 40-ம் நாட்களில் களைக்கொத்து கொண்டு களை எடுக்கலாம். பொதுவாக மண் பரிசோதனை படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யவிடில் ஏக்கருக்கு 24: 12: 12 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவேண்டும். முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தையும் 50% தழை சத்தினையும் களை எடுத்த பின்பும், (விதைத்த 35வது நாளிலும்) மீதியுள்ள 50% தழைச்சத்தினை 55வது நாளில் இட்டு மண் அணைக்க வேண்டும். நெல் தரிசு விதைப்பு வயலில் ஏக்கருக்கு 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் 10 கிலோ மக்கிய தொழு உரம் கலந்து தூவ வேண்டும். இதன் மூலம் 25% தழைச்சத்தை மிச்சப்படுத்தலாம்.

நெல் தரிசுப் பருத்தியின் மிதமான வளர்ச்சியால் நீராவி போக்கு அதிகமாகி பயிரை நீர் தேவையை அதிகரிக்கிறது. எனவே 10 முதல் 12 கணுவிற்கு மேற்பட்ட இளம் குருத்தினை கிள்ளி பயிரின் நீர் தேவை கணிசமாக குறைக்கலாம். இவ்வாறு செய்வதால் பக்க கிளைகள் அதிகமாக தோன்றி அதிக காய்கள் காய்த்து விளைச்சல் அதிகரிக்கும்.