திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிறைவு சம்பா சாகுபடியில் மட்டும் 5 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


இது கடந்தாண்டை விட பத்தாயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி பணிகளை தொடங்குவதற்காக கடந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளிலும் 3 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டது.




ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த ஆண்டு ஒரு மாதம் முன்கூட்டியே செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதனை ஒட்டி திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடமிருந்து 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 5,38,000 மெ.டன் நெல்  கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக இதுவரை 7 லட்சத்து 28 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.



 

தற்பொழுது அறுவடை பணிகள் 100 சதவீதம் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் 5,28,000 மெட்ரிக் டன் மேல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஐந்து லட்சத்து 38 ஆயிரம் மெடன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு சம்பா சாகுபடியில் மட்டும் பத்தாயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார் தற்பொழுது கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். 

 

விவசாயிகள் கோரிக்கை:

 


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மாவட்ட வாரியாக உறுப்பினர்கள் நியமனம் செய்து கூட்டம் நடத்த வேண்டுமென, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்கள் விவசாய நிலங்களையும், சூழலியலையும் பாதிக்கும் எனவே இத்திட்டங்களை காவிரி டெல்டாவில் செயல்படுத்த கூடாது என கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்ட களத்தில் நம்மாழ்வார் , மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் விவசாயிகள் பொதுநல அமைப்புகள் பங்கேற்றன.

 

அரசியல் கட்சிகளும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவளித்தன. இந்த சூழலில் தான் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த பழனிச்சாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என டெல்டா மாவட்டங்களை அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு பின்னர் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது அந்த கமிட்டி கூட்டம் கூட்டப்படவில்லை. அதன் பிறகு பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அந்த கமிட்டியில்  காவிரி டெல்டா பகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒருமுறை அந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காவல் டெல்டாவில் செயல்பாட்டில் உள்ள ஓஎன்ஜிசி தனது விரிவாக்க திட்டங்களை அவ்வப்போது செய்ய முயற்சிப்பதும் அதனை எதிர்த்து விவசாயிகள் போராடுவதும் தொடர்கிறது.

 

இந்த நிலையில்தான் கடந்த 29ம் தேதி காவிரி டெல்டா மாவட்டத்தின் வடசேரியை மையமாகக் கொண்டு நிலக்கரி திட்டத்துக்கு  மத்திய அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பதட்டமும் அச்சமும் அடைந்தனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களை கையில் எடுத்தனர். இதன் தீவிரத்தை உணர்ந்த தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் இத்திட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த விடமாட்டோம் என்பதை உறுதிபட தெரிவித்து இருக்கிறார் இது தவிர பிரதமருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். இது ஆறுதலாக அமைந்துள்ளது என்கின்ற போதும் விவசாயிகளின் உணர்வுகள் அரசின் கவனத்திற்கு அவ்வப்போது செல்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது அதனை உறுதி செய்ய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய உறுப்பினர்களை நியமித்து உடனடியாக இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும். கூட்டத்தின் வாயிலாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் முக்கியத்துவம் குறித்தும் இந்த பகுதிகளில் நிலக்கரி மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தக்கூடாது என்பதையும் தெளிவுபடாத மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.