வேளாண் தொழிலில் பல உயிரி மற்றும் உயிரி அல்லாத காரணிகள் பயிர்களின் விளைச்சலில் இழப்பை ஏற்படுகின்றன. அதில் களைச் செடிகளின் பங்கு முக்கியமானதாகும். இக்களைச்செடிகள் பயிர்களுடன் நன்றாக போட்டியிட்டு அவற்றுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களை எடுத்துக் கொண்டு விளைச்சலை வெகுவாக குறைக்கின்றன.


நெல் வயல்களில் களைகளை கட்டுப்படுத்தி உயர் விளைச்சல் எடுக்க உன்னதமான வழிமுறைகள் குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.


தமிழகத்தில் விவசாயிகள் நெல் பயிரை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இதில் களைகளினால் 15 முதல் 90 சதவீதம் விளைச்சல் வெவ்வேறு சாகுபடி முறைகளில் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களைகளை உரிய காலத்தில் கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.
 
நன்செய் நில களைகள்


நெல் வயல்களில் காணப்படும் களைச்செடிகளை நன்செய் நில களைகள் எனக் கூறலாம். இவை நீர் தேங்கி உள்ள இடங்களிலும், காற்றோட்டம் இல்லாத இடங்களிலும் சூரிய ஒளி குறைவாக உள்ள இடங்களிலும் மிக நன்றாக வளரக்கூடியது. இக்களைச் செடிகள் அதிகளவு விதை உற்பத்தி செய்யக் கூடியது.


களைகளினால் ஏற்படும் பாதிப்பு


களைகளை கட்டுப்படுத்தாவிடில் முழு விளைச்சல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீர் நிலைகளில் காணப்படும் நீர் களைகள் நீர் பாசனத்திற்கு இடையூறாக உள்ளது. இவை விளை பொருள்களின் தரத்தை குறைத்து விடுகின்றன இதனால் நடவு நெல்லில் 15 முதல் 35 சதவீதம் வரையும், விதைப்பு நெல்லில் 30 முதல் 65% வரையும், மானாவாரி நெல்லில் 45 முதல் 90% வரையும் விளைச்சல் இழப்பு ஏற்படுகின்றது. களைகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். களைக்கொல்லிகளை முழுவதுமாக உபயோகித்து களை நிர்வாகம் செய்ய முடியாத ஒன்று.


நன்செய் நிலக்களைகளை கட்டுப்படுத்தும் முறைகள்




நெற்பயிரில் செலவில் சிக்கனம் மற்றும் லாபகரமான பயிர் விளைச்சல் பெற களை விதைகள் கலப்பில்லாத பயிர் விதைகளை உபயோகிக்க வேண்டும். வரப்பு மற்றும் வாய்க்கால்களில் களை வராமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கோடை உழவு செய்து சிறந்த முறையில் நிலத்தை தயார்படுத்த வேண்டும். உரிய பயிரினையும், ரகத்தையும் தேர்வு செய்ய வேண்டும். பயிர் எண்ணிக்கையை பராமரித்தல் வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை ஊடு பயிராக இடுதல், தகுந்த பயிர் சுழற்சியை கடைப்பிடித்தல், ஏற்ற களைக்கட்டுப்பாட்டு கருவிகளை பயன்படுத்த போன்றவை களைகளை கட்டுப்படுத்தும் முறைகள் ஆகும்.


கோடை உழவு செய்து களைகளின் வேர்கள் கிழங்குகள் மூலம் பரவக்கூடிய களைகளின் பாகங்களை அகற்ற வேண்டும். பயிர் விதைகள் மூலமாக சில களைகள் பரவுவதால் சான்றிதழ் பெற்ற விதைகளை தேர்ந்தெடுத்து பயிர் செய்ய வேண்டும். பருவத்தே பயிர் செய்வதால் பயிர்கள் விரைவாக வளர்ந்து களைகள் முளைப்பது ஓரளவு தடுக்கப்படுகிறது.


களைகளின் போட்டிப் பயிர்களான பசுந்தால் உர பயிர்களான அகத்தி, கேசியா போன்ற பயிர்களை பயிரிடுதல் மூலம் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். பயிர் வளர்ச்சியின் ஆரம்ப காலங்களில் களைகளை கட்டுப்படுத்துவதால் பயிரின் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கப்படுவதில்லை. அதிக களைகளை முளைக்கும் பகுதிகளில் பரிந்துரைக்கப்படும் களைக்கொல்லி தெளிப்பு மற்றும் கைகளை எடுப்பது அவசியம்.




கோனோ லீடர் கொக்கி களை எடுப்பான் போன்ற ஆட்கள் அல்லது மோட்டார் மூலம் இயங்கக்கூடிய உளவியல் சாதனங்களை வரிசை விதைப்பு அல்லது நடவு செய்த பயிரில் பயன்படுத்தலாம். பயிர் விதைத்து அல்லது நடவு செய்து முதல் தண்ணீர் பாய்ச்சிய மூன்றாவது நாள் முதல் ஐந்தாவது நாள் வரையில் களைகள் முளைக்கும் முன்பு களைக்கொல்லியை நிலத்தின் மீது சீராக தெளிக்க வேண்டும்.


களைகள் முளைத்த பின் நன்கு வளர்ந்த நிலையில் 2, 4 டிசோடியம் உப்பு களைக்கொல்லியை நெல் விதைத்த அல்லது நடவு செய்த 15 நாட்களுக்கு பின் தெளிப்பதன் மூலம் வளர்ந்த கலைகளை கட்டுப்படுத்தலாம். புழுதி நெல்லில் களைக்கொல்லி தெளித்து பின் சீராக நீர் பாய்ச்ச வேண்டும்.


களைக் கொல்லிகள் மூலம் களை மேலாண்மை


நடவு நெல் - நெல் நாற்றங்கால் வயல்


எக்டேருக்கு பூட்டா குளோர் 2 லிட்டர் அல்லது தயோபென் கார்ப் 2 லிட்டர் அல்லது பென்டிமெத்தலின் 2.5 லிட்டர் அல்லது அனிலோபாஸ் 1.25 லிட்டர் விதைத்த எட்டாம் நாள் தெளிக்க வேண்டும். மருந்தை தெளித்த பின்னர் நீர் மறையும் வரை மீண்டும் நீர்பாச்சுதல் கூடாது. மருந்து கலந்த நீரை வடிகட்டுதலும் கூடாது.


களைக் கொல்லிகளை ஐம்பது கிலோ மணலில் கலந்து நடவு செய்த மூன்று ஐந்து நாட்களில் 2.5 சென்டிமீட்டர் அளவு நீரில் சீராக துவ வேண்டும். இரண்டு நாட்களுக்கு நீரை வயலில் இருந்து வடிக்கவோ அல்லது நீர் பாய்ச்சவோ கூடாது. பின்பு 30-35 நாட்களில் ஒரு கைக்களை எடுக்கவும். களைக்கொல்லிகள் உபயோகிக்காமல் இருக்கும் பட்சத்தில் இரு முறை 15- 20 மற்றும் 35- 40 நாட்களில் கைகளை எடுக்கலாம். இவ்வாறு நன்செய் நிலங்களில் உள்ள களைச்செடிகளை மேற்கூறிய உத்திகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்பங்களையோ ஒருங்கிணைந்த முறையையோ கையாண்டு களைகளை நன்றாக கட்டுப்படுத்தி அதிக விளைச்சலை பெறலாம்.