தஞ்சாவூர்: காவிரி டெல்டா பகுதிகளில் முறை வைத்து தண்ணீர் விடும் திட்டத்தால் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


பிரித்து வழங்கப்பட்ட தண்ணீர்


தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக இந்த ஆண்டு வழக்கமான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.  ஜூலை 31ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் நீர் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 


முறைப்பாசனம் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு


தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்த நிலையில் கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1704 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்யும் வகையில் முறைப்பாசனம் அமல்படுத்தப்படும் என  நீர்வளத்துறை அறிவித்தது.


இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முறை பாசனம் அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:




சம்பா சாகுபடி பாதிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு


கல்லணை கால்வாய் மூலம் பாசனம் பெரும் பரப்பளவு அதிகம். தற்போது மேட்டூர் அணையில் இரந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் முறைப்பாசனம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.


கல்லணை கால்வாயில் ஏற்கனவே முழு கொள்ளளவு நீர் திறக்காமல் குறைந்த அளவே நீர் திறக்கப்பட்டதால் இன்னும் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர் வரவில்லை. பாசனத்துக்கும் வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டதால் சம்பா சாகுபடியில் பெரும் பின்னடைவும், மகசூல் இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கல்லணை கால்வாய் ஆற்றில் தொடர்ந்து முழு கொள்ளளவு நீர் திறந்து விட வேண்டும் என்றனர்.


வெண்ணாற்று பாசன விவசாயிகளும் எதிர்ப்பு


இதேபோல் முறை வைத்து தண்ணீர் திறப்பதற்கு வெண்ணாற்று பாசன விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட போது கூட திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நாகை மாவட்டம் தலைஞாயிறு உள்ளிட்ட கடைமடை வரை உள்ள ஆறுகளுக்கு சென்று அடைந்ததைத் தவிர பெரும்பாலான கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்கக்கூடிய வாய்க்கால்களில் தண்ணீர் முழுமையாக பாயவில்லை.


இந்த சூழலில் முறை வைத்து தண்ணீர் திறக்கப்படும் என்ற உத்தரவு கடைமடை விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே 6 நாட்கள் முறை வைத்து தண்ணீர் திறக்கும் நாட்களிலாவது கடைமடை வரை உள்ள கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முறைபாசன திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். முறை வைத்து தண்ணீர் விட்டால் சம்பா சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் விவசாயிகள் கவலையாக உள்ளது.