தலைஞாயிறு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளின் ஈரப்பதத்தை மத்திய தொழில் நுட்ப அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. அப்போது, கையில் முளைத்துப் போன அழுகிய நெற்கதிர்களுடன் விவசாயிகள் முறையிட்டனர்.


காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் நெல்மணிகளின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் 25 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் நெல் கொள்முதல் விதிமுறைகளை தளர்த்தி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்கும்படி வலியுருத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தொழில்நுட்ப அதிகாரிகளை கொண்ட குழுவை அனுப்பி நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி மத்திய அரசு உத்திரவிட்டது. 



 

யூனூஸ், பிரபாகரன், போயா ஆகிய மூன்று தொழில்நுட்ப அதிகாரிகளை கொண்ட குழு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகளின் ஈரப்பத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.

 

நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, கச்சநகரம், வலிவலம், பட்டமங்களம், சீராங்குடிபுலியூர், சீயாத்தமங்கை, ஏனங்குடி ஆகிய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழு ஆய்வு மேற்கணடது. அப்போது  அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வு செய்து நெல் மணிகளின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். அங்கு கையில் அழுகிய முளைத்துப் போன நெற்கதிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் அதிகாரிகளுக்கு காண்பித்தனர். மழையினால் முளைத்துப் போன நெல் கதிர்களை ஒதுக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிர்மணிகளை ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்று அங்கு ஆய்வினை மேற்கொள்ள உள்ளனர்.