கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும்  நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாரம்பரிய நெல்லை மீட்டெடுக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நெல் திருவிழா நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.


இந்த கண்காட்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள், விதைகள், இயற்கை விவசாய முறைகள் குறித்த தகவல்கள், மரக்கால், தண்ணீர் இறைக்கும் கமலை கூணை, இறைவெட்டி உள்ளிட்ட பழங்கால நீர்பாசன கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 




இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறும்பொழுது, "தாமிரபரணி மூலம் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் தென்காசி, தூத்துக்குடியை மட்டும் எடுத்துக்கொண்டால் சுமார் 1.45  லட்சம் ஏக்கர் நிலம் நெல் விவசாயம் செய்யப்பட்டது, தூத்துக்குடி தனியாக பிரிக்கப்பட்ட பின் தற்போது 1.15 லட்சம் ஏக்கர் நெல்லையில் நெல் சாகுபடி செய்து கொண்டிருக்கிறோம். எந்த அளவு நெல் சாகுபடி முக்கியம் என்பதை வந்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் தெரியும், நெல் தான் நமது நாகரீகத்திற்கு அடிப்படை, அதனால் தான் இந்த நெல் திருநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் முதன்முறையாக நெல்லையில் துவங்கி இருக்கிறார். இது பாராட்டக்கூடியது.


சத்தான, பாரம்பரியமான நெல், அரிசி ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது.  திமுக அரசும் விவசாயிகளுக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் மீது அக்கறை கொண்டவர் முதல்வர் என்பதால் வேளாண்துறைக்கு  என தனி பட்ஜெட், நேரடி கொள்முதல் நிலையம்,  விவசாய கடன்கள் ரத்து,  40 கிராமிற்கு குறைவாக தங்கநகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி  என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன் பெற்று உள்ளனர்.




குறிப்பாக விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வட்டியில்லா கடனாக ஓராண்டு காலத்திற்கு விவசாய கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு எத்தனையோ சலுகைகளை அரசு செய்தாலும் கூட விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை, ஆகவே  தான் அதற்கு மாற்றாக சில புதிய திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். தமிழ் நாட்டில் உள்ள 8 கோடி மக்களையும் வாழ வைத்துக்கொண்டு இருப்பது விவசாயிகளின் உழைப்புதான்" என்று பேசினார்.


தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் நெல் உற்பத்தி என்ற நூலை வெளியிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கியதுடன் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பவர் டில்லர், டிராக்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  இந்த விழாவில் நெகிழியை தவிர்க்கும் வகையில்  மேடையில் பனை ஓலை, நெற்கதிர்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அழகு படுத்தப்பட்டிருந்தது. மேலும், முக்கிய பிரமுகர்களுக்கு நெற்கதிரால் ஆன பொக்கே, மற்றும் மாலையும் அணிவிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.