விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நெற்பயிரில் கதிர் உறை அழுகல் நோய், இலை உறைகளில் நீள்வட்ட அல்லது ஒழுங்கற்ற சாம்பல் மற்றும் பழுப்புநிற புள்ளிகள் போன்ற அறிகுறிகள் தென்படும்.

Continues below advertisement

தஞ்சாவூர்: நெற்பயிரில் பூச்சி தாக்குதல் தென்படுவதால் அதனை கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண்மைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து தஞ்சை வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா கூறியிருப்பதாவது:

தஞ்சை வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் தொடர் வடகிழக்கு பருவ மழையினால் சத்து பற்றாக்குறை மற்றும் பூச்சி நோய்த்தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. நெற்பயிரில் சத்து பற்றாக்குறையை போக்க தண்ணீரை நன்றாக வடிகட்டிய பின்பு ஏக்கருக்கு சிங்க்சல்பேட் 10 கிலோவை 25 கிலோ மணலுடன் கலந்து இடுவதன் மூலமும், நெல் நுண்ணூட்டம் 5 கிலோவை 25 கிலோ மணலுடன் கலந்து இடுவதன் மூலமும் மழையினால் சேதமடைந்த நெற்பயிர்களின் வேர்கள் நன்றாக வளர்ச்சி பெற்று நெற்பயிர்கள் மீண்டும் துரிதமாக வளர்ந்திட உதவி புரியும்.

தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நெற்பயிரில் கதிர் உறை அழுகல் நோய், இலை உறைகளில் நீள்வட்ட அல்லது ஒழுங்கற்ற சாம்பல் மற்றும் பழுப்புநிற புள்ளிகள் போன்ற அறிகுறிகள் தென்படும். இதை கட்டுப்படுத்த சூடோமோனோஸ் என்ற எதிர் உயிரியை ஏக்கருக்கு 1 கிலோ என்ற வீதம் 25 கிலோ தொழு உரத்துடன் முதல் நாள் இரவு கலந்து வைத்து மறுநாள் வயல்களில் இட வேண்டும்.

இல்லையென்றால் ரசாயன பூஞ்சான கொல்லி மருந்துகளான டிரைசைக்ளோசெல் ஒரு ஏக்கருக்கு 120 கிராம் ஹெக்சகோனஸோல் ஒரு ஏக்கருக்கு 250 மில்லி என்ற அளவில் தெளிப்பதன் மூலம் கட்டுபடுத்தலாம். மேலும் நெற்பயிர்களில் பரவலாக, இலைச்சுருட்டு புழு மற்றும் ஆணை கொம்பன்ஈபோன்ற தாக்குதல் தென்படுகிறது. இலைச்சுருட்டு புழு தாக்குதல் இருந்தால், இலைகள் வெண்மையாக மாறிவிடும்.

இலைகளை நீள்வாக்கில் மடித்து உள்ளிருந்து கொண்டு  பச்சையத்தை சுரண்டி உண்ணும் இலைச்சுருட்டு புழுவை கட்டுப்படுத்த முட்டை உண்ணியான டிரைக்கோகி ரம்மா கைலோனிஷ் ஏக்கருக்கு 3 முறை ஒருவார இடை வெளியில் பயன்படுத்த வேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு அசாடிராக்டின் 400 மில்லி அல்லது ஒரு ஏக்கருக்கு அசிபேட் 75 சதவீதம்  எஸ்.பி. 400 கிராம் என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் அறிகுறியான தாக்கப்பட்ட குருத்தில் இருந்து வெளிவரும் இலை வெங்காய இலை போல குழலாக மாறி விடும். மேலும் புழுக்கள்  தண்டை துளைத்து நடுக்குருத்தை தாக்கும். இதை கட்டுப்படுத்த புற ஊதா விளக்கு பொறிகளை வயல் வெளிகளில் அமைக்க வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு அசி பேட் 75 சதவீதம் எஸ்.பி.- 200 கிராம் அல்லது ஒரு ஏக்கருக்கு பிப்ரோனில் 5சதவீதம் எஸ்சி 500 கிராம் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே, விவசாயிகள் மேற்காணும் பயிர்பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி,தொடர் மழையினால் நெற்பயிருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பினை சரி செய்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் மேட்டுப்பாங்கான பகுதிகளில் சாகுபடி பயிர்களுக்கு உதவிகரமாக இருந்தது. தாழ்வான பகுதிகளில் சற்றே பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மாலை வேளையிலேயே பனிப்பொழிவு இருப்பதால் சாகுபடி பயிர்களில் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதற்காக விவசாயிகள் பூச்சிக் கொல்லி உரங்களை தெளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola