திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 2ஆம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது. நெல் விற்பனை செய்ய நாளை முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துரிப்பது; நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா பருவத்தில் முதல் கட்டமாக 11 தாலுகாக்களில் 22 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் வருகிற 2-ந்தேதி முதல் செய்யப்பட உள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 100 உயர்த்தி ரூபாய் 2,160-ம், இதர ரகங்களுக்கு ரூபாய் 75 உயர்த்தி ரூபாய் 2,115-ம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


 




திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் குன்னத்தூர், தச்சூர், சேத்துப்பட்டு தாலுகாவில் நெடுங்குணம், நம்பேடு, செய்யாறு தாலுகாவில் பாராசூர், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் அணுக்குமலை, சோமாசிப்பாடி, தண்டராம்பட்டு தாலுகாவில் தண்டராம்பட்டு, திருவண்ணாமலை தாலுகாவில் வெளுக்கானந்தல், பெரியகிளாம்பாடி, வந்தவாசி தாலுகாவில் மருதாடு, போளூர் தாலுகாவில் புதுப்பாளையம், குன்னத்தூர், மண்டகொளத்தூர், கலசபாக்கம் தாலுகாவில் எலத்தூர், கேட்டவரம்பாளையம், செங்கம் தாலுகாவில் அன்வராபாத், எறையூர், அரட்டவாடி, நாகப்பாடி, வெம்பாக்கம் தாலுகாவில் வடஇலுப்பை என 22 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்து பயன் பெறலாம் என்றும். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு தொடங்கும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினை அடங்கல் பெற வேண்டும்.


 




 


நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு "வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது" என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டு அவரால் பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல், நிராகரிப்பு செய்யப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும்.


 


 




 


விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்), 9443911434 (மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது 'வாட்ஸ் அப்' மூலமாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும். எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.