நாகை மாவட்டத்தில் டிஏபி மற்றும் யூரியா தட்டுப்பட்டால் 25 நாட்கள் ஆன குருவைப் பயிர்கள் வளர்ச்சியின்றி பாதிக்கும் நிலை உள்ளதாக தெரிவித்த விவசாயிகள், தட்டுப்பாடு இன்றி வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் ஒரத்தூர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

 



 

இந்நிலையில், ஒரத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 25 நாட்களான பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு முட்டை டி ஏ பி, அரை மூட்டை யூரியா கலந்து கொடுக்க வேண்டும். ஆனால் நாகை தாலுக்கா பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய டிஏபி மற்றும் யூரியாக்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தால் வழங்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 



 

குறுவை தொகுப்பு திட்டம் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மூலம் விலைக்கு வழங்க வேண்டும் எனவும் வருங்காலங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இயக்குனரிடம் கேட்டபோது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா 496 டன், டிஏபி 834 டன், எம் ஓ பி 251 டன், காம்ப்ளக்ஸ் 280 டன் கையிருப்பு உள்ளது. இதேபோல் தனியாரிடம் 354 டன் யூரியா, 52 டன் டிஏபி, 23 டன் எம் ஓ பி, 218 டன் காம்ப்ளக்ஸ் உள்ளது எனவும் விவசாயிகள் தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இயக்குனர் அக்கண்டராவ் தெரிவித்தார்.