திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சியில் கூட்ட அரங்கில் இருந்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 




 


கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தமிழக முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். அப்போது தமிழக விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டுமென மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் எனவும், இந்த தீர்ப்பு வழங்கியும் கூட கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை தமிழக விவசாய சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும், குறிப்பாக 1996-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான குழுவில் தானும் பங்கேற்றேன் என்றும்,


 




 


உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதால் அன்றைய தினம் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும் சாதாரணமான விஷயமாக இருக்கும் எனவும், ஆனால் இன்றைய தினம் கர்நாடகாவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசுதான் தான் தோன்றித்தனமாக செயல்படுவது தமிழக விவசாயத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிப்பது போல இருக்கின்றது என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட ஐந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட மறுக்கக்கூடிய கர்நாடகா அரசின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்ணீர் திறந்து விட கேட்டுக்கொள்கிறோம் எனவும், இல்லை என்றால் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்த போவதாக  தெரிவித்தார். இது மட்டுமின்றி இன்றைக்கு நடைபெற்ற விவசாயிகள் மாதந்திர கூட்டத்தில் கூட கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தண்ணீரை உடனடியாக வழங்கவேண்டும் என்றும் இது குறித்து தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி தண்ணீரை உடனடியாக பெற்று தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.