தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் குறுவை சாகுபடி பயிரில் இலைக்கருகல் நோயால் பதராக நெல் மணிகள் மாறிப் போனதால் வேதனையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். 


தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.


நடப்பாண்டு மேட்டூர் அணை வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்தது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளான பெருமாக்கநல்லூர், வையசேரி, புரசக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பம்பு செட் மற்றும் ஆற்று நீரைக் கொண்டு 1000 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்துள்ளனர்.


இந்த நிலையில் சாகுபடி செய்துள்ள குறுவை நெற்பயிரில், இலை கருகல் நோய் தாக்கியதால் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெற்கதிரில் உள்ள இலைகள் கருகியதால் நெல்மணிகள் பதராகி மகசூல் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


மேலும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே இந்த நோய் நெல்லை தாக்கி மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அறுவடை செய்த நெல்மணிகள் அறுவடை கூலிக்கு கூட பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.




எனவே அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வயல்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஏக்கர் கணக்கில் நெல்மணிகள் பதறாய் போனதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். 


ஈர கசிவுடன் கூடிய மஞ்சள் புள்ளிகள் இலையின் நுனி மற்றும் ஓரங்களில் தோன்றி பின் நீளவாக்கில் பெரிதாகி இலையின் கீழ்நோக்கி ஒழுங்கற்ற மஞ்சள் நிறத்தில் பரவும். இந்நோய் தீவிரமாகும் போது மஞ்சள் நிறம் பழுப்பாக்கி கருகி காய்ந்து விடும். இது இலைக்கருகல் நோய் ஆகும்.


கட்டுப்படுத்தும் முறைகள்: நோய் தாக்கப்பட்ட வயல்களில் இருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் ப்ளீச்சிங் பவுடர் உடன் ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சிங்சல்பேட் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.


ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ பிளீச்சிங் பவுடரை பாசன நீருடன் கலக்க வேண்டும். கதிர் வந்த பின் யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து மேலுரமாக இட வேண்டும். 20 சத சாணக்கரைசல் இந்நோயினை முழுமையாக கட்டுப்படுத்தும். 15 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம்.