தஞ்சாவூர்: தஞ்சை அருகே காராமணித்தோப்பு பகுதியில் வெண்டைக்காய்  சாகுபடியில் களை எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.


தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அருகே காராமணித்தோப்பு கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வெண்டைக்காய் சாகுபடியைப் பொருத்தவரையில் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் பயிரிடலாம். வெண்டைக்காய் சாகுபடியில் தண்ணீர் அளவுடன் இருக்க வேண்டும். தண்ணீர் அதிக அளவில் விளை நிலத்தில் இருந்தால், சாகுபடியானது பெரிய அளவில் மகசூல் கிடைக்காது. மேலும் மற்ற காய்கறி சாகுபடிகளில் வெண்டைக்காய் சாகுபடியே அதிக அளவில் லாபத்தை ஈட்டி தரக்கூடிய ஒரு சாகுபடியாகும். பெரும்பாலும் மேடான பகுதிகளிலே இந்த வகையான சாகுபடிகளை செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் பயிரிட வேண்டும் என்றால் முதலில் விளைநிலங்களை தயார் படுத்துவதற்காக ஏறு ஓட்டி விட்டு பின்பு, புற்கள் அதிக அளவில் இருந்தால் அதனை எடுத்துவிட்டு இயற்கை உரமோ அல்லது செயற்கை உரமோ தெளித்த பின்னர் அந்த நிலம் முழுவதும் பட்டம் இட வேண்டும்.


வெண்டைக்காய் சாகுபடி செய்முறை


இந்த வாய்க்காலை 1.5 அடிக்கு ஒரு வாய்க்காலாக முறைப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 700 கிராம் வெண்டைக்காய் விதைகளை வாய்க்கால்களில் தேவையான அளவு மட்டுமே தண்ணீர் செலுத்திய பிறகு ஒரு வாய்க்கால் விட்டு ஒரு வாய்க்கால்களில் முழுவதுமாக விதைகளை செலுத்த வேண்டும்.


வெண்டைக்காயானது முதலில் பூ வந்து அதிலிருந்து தான் காய் வரும் நிலையில் இந்த வெண்டைக்காய் சாகுபடியானது சரியாக விதை செலுத்திய 30- 35 நாள்களில் வெண்டைக்காய்களை ஒடித்து எடுக்கலாம். மேலும் ஒரு முறை விதைக்கப்படும் இந்த வெண்டைக்காய் விதையின் வாழ்நாள் ஆனது மூன்றில் இருந்து நான்கு மாத காலம் ஆகும். இந்த நான்கு மாதங்களும் செடிகளில் வளரும் வெண்டைக்காய்களை முதல் 30-35 நாட்கள் பிறகு ஒடித்த பின்னர், சாகுபடியானது கடைசி மூன்று மாதங்களில் அதிக அளவில் இருக்கும்.



ஒருநாள் விட்டு ஒருநாள் வெண்டை அறுவடை


இந்த வெண்டைக்காய்களை ஒருநாள் விட்டு ஒரு நாள் சாகுபடி செய்யலாம். ஒரு நாள் ஒடிக்கும் வெண்டைக்காய் மறு நாளே அந்த செடிகளில் வளர்ந்து விடும் எனவே அந்த வெண்டைக்காய் முத்திவிடுவகற்கு முன்னதாகவே, கண்காணித்து ஒடிக்க வேண்டும். மேலும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு முறை (முதல் 30 நாட்களில்) சாகுபடி செய்யப்படும் வெண்டைக்காய்களின் எடை அதிகபட்சம் 60 இலிருந்து 80 கிலோ இருக்கும். இந்த வெண்டைக்காய் சாகுபடியை பொறுத்தவரையில் செடிகளில் பூச்சிகள் மற்றும் சில தொற்று கிருமிகள் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது.


அதில் முக்கியமாக இந்தச் செடிகளில் உள்ள இலையை திருப்பிப் பார்த்தால் மஞ்சள் நிறத்தில் வளைந்து காணப்படுவது போல் இருந்தால் பச்சை கொசு, மஞ்சள் கொசு இந்த இரண்டு வகையான பூச்சிகளும் அந்த பாதிக்கப்பட்ட ஒரு செடியில் இருந்து அந்த ஒரு கிருமியை தன்னுள் ஏற்று மற்ற செடிகளில் பரப்பி விடும். இதனால் மொத்த வெண்டைக்காய் செடியும் பாதிக்கப்படும். எனவே காய்கள் வளராமல் பெரிய அளவில் நஷ்டத்தை கொடுக்கும். இந்த ஒரு பாதிப்பை தடுப்பதற்காக முன்கூட்டியே செயற்கை உரங்களான (யூரியா, காம்ப்ளக்ஸ்) மற்றும் இயற்கை உரங்கள்( ஆட்டுபுளுக்கை, மாட்டுச்சாணம், கோமியம், சர்க்கரை, விளைநிலத்தின் மண் ஆகியவை கலந்த கலவை) பயன்படுத்தினால் இந்த தொற்றுக்கிருமி தாக்கத்திலிருந்து செடிகளை பாதுகாக்கலாம்.


களை எடுக்கும் பணிகள் மும்முரம்


இதிலும் செயற்கை உரங்களை காட்டிலும் இயற்கை உரங்களே அதிக அளவில் பாதுகாப்பாக இருக்கும். இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்தால் அதிக அளவில் களைகள் மண்டி உள்ளது. அதனை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.