தஞ்சாவூர்: மண்ணின் வளத்தை நிர்ணயிக்கக்கூடிய உயிரியல் காரணியான மண்புழுக்கள் வளமான மண்ணை உயிரோட்டம் உள்ளதாக ஆக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மண்வளத்தை பெருக்க மண்புழு உரம் தயாரிப்பது, பயன்படுத்துவது விவசாயிகளின் கடமை.
 
நிலத்தை இயற்கையாகவே உழுது, மண்ணின் வடிவமைப்பை மேம்படுத்தி, நல்ல காற்றோட்டத்தை உருவாக்கி, பல்வேறு வகையான நுண்ணுயிரிகளின் புகலிடமாக மாற்றுவதுடன் வளிமண்டல தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி களர், உவர் நிலத்தை மேம்படுத்தி நிலையான வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கும் மண்புழுக்களின் பண்புகளையும், வளர்க்கும் முறைகளையும் மண்புழு உரத்தின் பயன்பாடுகளையும் மற்றும் மண்புழு உரம் சார்ந்த அனைத்து தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.



மண்புழுக்கள் பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப்பகுதியை மட்டுமே உண்ணக்கூடியது. இவைகள் வெளியிடுகின்ற மண்புழு உரம் ஆனது பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திட்டமிட்ட பரிபூரண பயிர் உணவு எனவும் கருதப்படுகிறது. நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள வளமான மண்ணையும் நிலத்தின் மேற் பகுதிக்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருக்கிறது.





மைக்கேல்சன் மண்புழுவின் வல்லுனர் 1933 ஆம் ஆண்டு மண்புழுக்களை ஒலிகோகிட்டா என்ற குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தினார். உலகில் சுமார் 240 மண்புழுக்களின் பேரினங்களும், 3320 மன்புழுக்களின் சிற்றினங்களும் காணப்படுகிறது. இவை அனைத்தும் மொத்தம் 14 குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிகோகிட்டிடே என்ற குடும்பத்தில் சுமார் 67 பேரினங்களும், 509 சிற்றினங்களும் அடங்கியுள்ளது.

மண்புழுக்கள் ஒரு இருபால் உயிரியாகும். ஒரே மண்புழுவில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்படுகிறது. 14 வது கண்டத்தில் வயிற்றுப் பகுதியில் ஒரு ஜோடி பெண் இனப்பெருக்க உறுப்புகளும், 18 ஆவது கண்டத்தில் வயிற்றுப் பகுதியில் ஒரு ஜோடி ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் காணப்படுகிறது.

ஒரே மண்புழுவில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் இருந்தாலும் இரண்டு மண் புழுக்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்கிறது. மண்புழு மிகச் சிறிய உடல் அமைப்பை பெற்றிருந்தாலும் நன்கு வளர்ச்சி அடைந்து முறையான உணவு மண்டலத்தை பெற்றுள்ளது. உணவு மண்டலமானது வாய், வாய்குழி உணவு குடல் மற்றும் அரவைப்பை என்று பிரிக்கப்படுகிறது. வாயின் முன் பகுதியில் நீண்ட குழல் வடிவில் ஆசனவாய் உள்ளது. உணவுக் குழலானது உணவை வரவேற்கும் பகுதி செரிக்கும் பகுதி என சிறு சிறு பிரிவுகளாக காணப்படுகிறது.

மண்புழு உணவாக உட்கொள்கின்ற மண் மற்றும் இலை மட்டுகள் வரவேற்கும் பகுதியில் வழியாக சென்று அரவைப்பையில் நன்கு அரைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரைக்கப்பட்ட உணவு செரிக்கும் பகுதிக்கு சென்றடைகிறது. செரிக்கும் பகுதியில் அமைலேஸ், கைடினேஸ், இன்வர்டேஸ், லிபேஸ், புரோட்டியேஸ், பாஸ்படேஸ் போன்ற நொதிகள் சுரந்து உணவு சிதைவடைய செய்கிறது.

இது பின்னர் உறிஞ்சும் பகுதிக்கு செல்கிறது சிதைக்கப்பட்ட பொருள்களில் 5 முதல் 10 சதம் தன் உடல் வளர்ச்சிக்கு எடுத்துக் கொண்டு மீதியை எச்சமாக வெளியிடுகிறது. இதுவே மண்புழு உரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு இடத்தில் காணப்படும் மண்புழுக்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கக் கூடிய காரணிகளில் முக்கியமானது ஈரப்பதம், கார அமில நிலை மற்றும் அவ்விடத்தில் கிடைக்கக்கூடிய கரிம பொருளின் தன்மை மற்றும் அவற்றின் அளவு ஆகும்.

மண்ணின் மேற்பரப்பில் வாழக்கூடிய மண்புழு ஊதா, சிவப்பு, கருஞ்சிவப்பு மற்றும் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை முட்டை பருவத்தில் இருந்து வளர்ச்சி அடைய 70 நாட்களாகும். இவை நாளொன்றுக்கு ஏழு மில்லி கிராம் வளர்கிறது. அதிகபட்சமாக 1.5 கிராம் எடை கொண்டது. இவை சுமார் 50 நாட்களில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிறது. இவை இனச்சேர்க்கைக்கு பின்பு 5 முதல் 6 நாட்களுக்குள் முட்டை கூடுகளை இடுகிறது மூன்று நாட்களுக்கு ஒரு முறையே முட்டை கூடுகளை இடுகிறது. அடைகாக்கும் காலம் 23 முதல் 25 நாட்களாகும். ஒரு வருடத்தில் சுமார் 900 முட்டை கூடுகளை இடுக்கிறது.





ஒவ்வொரு முட்டைக்கூட்டில் இருந்து இரண்டு முதல் மூன்று இளம் புழுக்கள் உருவாகிறது. இவை சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. மண் புழுக்களை குழி முறையிலும், தொட்டி முறையில் வளர்த்து மண்புழு உரம் தயாரிக்கலாம்.

உரக்குழியின் அளவுகள் முறையே 2 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ளதாக இருக்க வேண்டும். கழிவு பொருட்களின் அளவினைப் பொறுத்து உரக் குழியின் ஆழத்தினை நிழற் பாங்கான மேட்டுப்பகுதியில் அமைக்க வேண்டும்.
 
மண்புழு உரத்தினை ஏக்கருக்கு ஒரு டன் அளவில் இடலாம். பூந்தொட்டிகளுக்கு 50 கிராம் வீதம் இருமுறையும், மரங்களுக்கு 100 கிராம் வீதம் நாலு முறையும் இடலாம். மண்புழு உரம் இடுவோம். மண்வளம் காப்போம்.