தஞ்சாவூர்: கழிவுகளை வளமான உரமாக மாற்றுவதன் மூலம் வளிமண்டல மாசுபாடு, மண்ணின் வளம் சரி செய்யப்பட்டு பல நன்மைகளை அளிக்க வழி வகுக்கிறது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி திறன் அதிகரித்து மண்ணின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. எனவே இயற்கை உரம் தயாரிக்க முன்வர வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இயற்கை உரங்கள் தயாரிப்பு


இயற்கையாகவே கழிவுகளானது நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்டோ அல்லது மக்கப்பட்டோ உருவானால் அது மக்கும் உரம். பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், உள்ளாட்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மூலம் ஏராளமான இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. உரம் மண்ணில் உள்ள கரிம பொருள்களின் அளவை அதிகரிக்கிறது. இது மண்ணின் உயிரினங்கள், மண்ணின் அமைப்பு, ஊடுருவல், நீர் வைப்புத் திறன் மற்றும் மண்ணின் வளம் ஆகியவற்றில் சாதகமான விளைவை உருவாக்குகிறது. உரத்தில் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் மூலம் நோய்கள், பூச்சிகள், களை விதைகள் அழிக்கப்படுகிறது. ஏனெனில் உரக்குவியலில் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதால் அவை உயிர் வாழ முடியாது.


குழிமுறை, குவியல் முறையில் இயற்கை உரம் தயாரிப்பு


இயற்கை உரங்களை குழி முறை, குவியல் முறையில் தயாரிக்கலாம். அரசு நிறுவனங்கள், தனிமைப்படுத்தப்பட்ட திறன்மிகு வேஸ்ட் டீகம்போசர் மற்றும் பயோ மினரல்ஸ் உற்பத்தி செய்து அவற்றை மேலும் பெருக்கி உரம் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தூர் முறை இந்தியாவில் உரம் தயாரிப்பதற்கான முதல் விஞ்ஞான முயற்சியாகும். இந்த முறையில் கழிவு பொருட்களை சாணம் அல்லது மனித கழிவுகளால் பரப்பி ஈரப்படுத்தப்படுகிறது. குழியின் அளவு நீளம் 4- 6 மீட்டர், அகலம் ஒரு மீட்டர், உயரம் 1 மீட்டர் உடையதாக இருக்க வேண்டும். கழிவு பொருட்களை அடுக்கு மூலம் குழியில் நிரப்பப்படுகிறது,


நுண்ணுயிரிகளின் செயல்திறன் அதிகரிக்கிறது


15 நாட்களுக்கு ஒரு முறை கழிவுகளை கிளறி விட வேண்டும் போதுமான காற்றோட்டம் தரும்போது நுண்ணுயிரிகளின் செயல்திறன் அதிகரிக்கிறது. உரம் 3, 4 மாதங்களில் தயாராகிவிடுகிறது. நாடெப் முறையில் குறைந்த அளவு கால்நடை சாணம் பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ மாட்டு சாணத்தில் இருந்து 40 கிலோ உரம் தயாரிக்கலாம். 100 டன் உரம் தயாரிக்க ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒரு பசுவின் சாணம் போதுமானது. மண்ணின் மேற்பரப்பில் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு தொட்டியில் உரம் தயாரிக்கப்படுகிறது.




காற்றின் சுழற்சி நன்கு இருக்கும்


உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு 15 சென்டிமீட்டர் அளவு இடைவெளியுடன் 9 அடுக்கில் இந்த தொட்டி கட்டப்படுகிறது இவ்வாறு அமைப்பதால் காற்றின் சுழற்சி நன்கு இருக்கும். சுவர் சாணத்தால் பூசப்பட்டிருக்க வேண்டும். கழிவு பொருட்கள் அடுக்கு மூலம் தொட்டியில் நிரப்பப்படுகிறது. முதல் அடுக்கு பயிர் கழிவுகள், களைகள் புல் போன்றவை 15 சென்டிமீட்டர் உயரத்திற்கு நிரப்ப வேண்டும். இந்த அடுக்கிற்கு மேல் 125 லிட்டர் தண்ணீரில் மாட்டு சாணத்தை கொண்டு தயாரித்த கரைசலை மெல்லிய அடுக்கு வடிவில் பரப்பப்படுகிறது. இந்த அடுக்குகள் செங்கல் மட்டத்திலிருந்து 0.6 முதல் 0.75 மீட்டர் உயரத்திற்கு அமைக்க வேண்டும்.


 


தொட்டி முழு கொள்ளளவு நிரம்ப 12 அடுக்குகள் தேவை
 


தொட்டியை அதன் முழு கொள்ளளவில் நிரப்ப 11- 12 அடுக்குகள் தேவை. ரெண்டு நாட்களில் கழிவுகளை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் குவியல்களில் வாயு கசிவு ஏற்படக் கூடாது. 20 நாட்களுக்குப் பிறகு குப்பை அமிழ்ந்த பிறகு 9 அங்குலங்கள் தொட்டியில் இறங்கி அதே முறையில் நிரப்பப்பட்டு மீண்டும் மண் மற்றும் சாணத்தை கொண்டு மூட வேண்டும். 160 - 175 கன அடி உயரம் மற்றும் 40- 50 கன அடி அளவு கழிவு பொருட்களில் இருந்து சுமார் மூன்று டன் எடையுள்ள உரம் பெறப்படுகிறது.


ஒரு பசுவில் இருந்து ஒரு வருடத்தில் சேகரிக்கப்படும் சாணத்தில் இருந்து 80 டன் உரம் தயாரிக்கலாம் இதில் 100 கிலோ தழைச்சத்து, 560 கிலோ மணிச்சத்து மற்றும் 140 கிலோ சாம்பல் சத்து கிடைக்கும். ஒரு தொட்டியை உருவாக்க ரூபாய் ஆயிரம் செலவாகும்.


பண்ணை கழிவுகளை மக்க வைக்கும் முறை


கரும்பு ஒரு எக்டேருக்கு சுமார் 10 முதல் 12 டன் உலர் இலைகளை தருகிறது. இதன் குப்பையில் 28% கரிம கார்பன், 0.35 முதல் 0.42 சதவீதம் நைட்ரஜன், 0.04 நாலு முதல் 0.1 5 சதவீதம் பாஸ்பரஸ் மற்றும் 0.50 முதல் 0.4 சதவீதம் பொட்டாசியம் உள்ளது. டிரைக்கோடெர்மா போன்ற பூஞ்சைகளை பயன்படுத்துவதன் மூலம் கரும்பு குப்பையை உரமாக்கலாம். ஒரு டன் கரும்பு குப்பை மக்க வைக்க 40 கிலோ பசுஞ்சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கரும்பு குப்பையுடன் நன்கு கலக்க வேண்டும்.


நாலடி உயரத்திற்கு குவியல் அமைக்க வேண்டும்


ஒரு டன் கழிவிற்கு வேஸ்ட் டீ கம்போசர் 20 லிட்டர் சேர்க்கலாம். குவியல் குறைந்தது நாலடி உயரத்துடன் அமைக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இக்கலவையை கிளறி விட வேண்டும். இவை அனைத்தையும் 3 அடி நீளம் 3 அடி அகலம் 4 அடி உயரம் கொண்ட குழிவில் நிரப்பி தயார் செய்ய வேண்டும். ஈரப்பதம் 60% இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் 45- 50 நாட்களில் உரம் தயாராகிறது. இதனை ஆறு மாதங்களுக்கு 40 சத ஈரப்பதத்துடன் சேமித்து வைக்கலாம். மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்து சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உற்பத்தியை கணிசமாக உயர்த்தலாம்.