தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சின்னையன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயி இளையராஜா தனது அரை ஏக்கருக்கும் மேலான நிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொடி பாகற்காய் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். முக்கியமாக இந்த கொடி பாகற்காய் சாகுபடியை இயற்கை முறையில் பாகற்காய்  செய்து வருகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.


கொடி பாகற்காய் சாகுபடி


பாகற்காய் சாகுபடி மற்றும் சாகுபடியில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி விவசாயி இளையராஜா தெரிவித்ததாவது: நான் சுமார் 25 ஆண்டுகளாக தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், கத்தரி, பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை  சாகுபடி  செய்து வருகிறேன். இதை சற்று மாற்றி மாற்றுப்பயிராக பாகற்காய் சாகுபடியை மட்டும் செய்ய முடிவு செய்து தொடங்கினேன். மக்களுக்கு நஞ்சில்லா உணவு பொருட்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொடி பாகற்காய் சாகுபடி இயற்கை முறையில் செய்ய முடிவு செய்தேன். இதற்காக இயற்கை சாகுபடி குறித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டு கொடி பாகற்காய் சாகுபடியை ஆரம்பித்தேன்.




முதலில் நிலப்பரப்பை பதப்படுத்தி விதைகளை நிலத்தில் நட்டு தண்ணீர் மற்றும் இயற்கை உரங்களை தெளிப்பதன் மூலம் 4-வது நாளில் கன்று வளர்ந்து விடும். பந்தல்கள் அமைத்து 15வது நாளில் செடிகளை பந்தலுக்கு கீழ் நடவேண்டும். மரக்கம்புகளை நட்டு கம்பிகளை வளைத்து கட்டியும் பந்தல் போல் அமைத்தேன். பந்தலுக்கு கீழ் ஒவ்வொரு செடியினை தனித்தனியாக வைத்து கம்பியில் சணல் கயிறுகளை கட்டி செடிக்கு நேராகப் படுமாறு தொங்கவிட்டு செடியில் லேசாக முடித்து போடவேண்டும். இதன்மூலம் பாகற்காய் செடியானது சணல் கயிற்றின் மூலம் மேலே பரவி பந்தல் முழுவதுமாக பாகற்காய் கொடியாக உருவாகிறது.


ரூ.70 ஆயிரம் செலவு


இதன் மூலம் எளிமையாக  எந்த இடையூறும் இல்லாமல் பாகற்காய் காய்த்து தொங்குகிறது. அரை ஏக்கர் நிலத்தில் பாகற்காய் சாகுபடி செய்ய எனக்கு  ரூ‌.70 ஆயிரம் செலவாகியுள்ளது. பாகற்காய் சாகுபடி செய்ய முதலில் தொழு உரம் அவசியம். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் இயற்கை முறையில் செய்தாலும், ரசாயன உரங்களை பயன்படுத்தி செய்தாலும் பூச்சித்  தாக்குதலை கட்டுப்படுத்த முடியாது. எப்படிப் பார்த்தாலும் மொத்த அறுவடை கணக்கில் 40 சதவீத காய் பூச்சி தாக்குதலால் வீணாகி விடுகிறது.


இதனால்தான் முழுக்க முழுக்க தொழு உரத்தை பயண்படுத்தினால் மட்டுமே  ஓரளவிற்கு பூச்சி தாக்குவதை கட்டுப்படுத்த முடியும்.  கார்த்திகை, மார்கழி, தை இந்த மூன்று மாதம்  பாகற்காய் சாகுபடி செய்ய உகந்த மாதமாகும்.




அப்படியே பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி 80 சதவீதம் அறுவடை செய்தாலும் விற்பனையில் பிரச்சனைகள் ஏற்படும். மார்க்கெட்டில் ஒரே விலை கிடைக்காது. திடீரென உயரும். திடீரென கிலோ மூன்று ரூபாய்க்கு கூட போகும். இதில் இடைத்தரகர்கள் கமிஷன், வாகன செலவு இவையெல்லாம் போக சில நேரம் விவசாயிக்கு கிலோவுக்கு ரூ‌.5 கிடைப்பதே அரிது.


பூச்சிகளை கட்டுப்படுத்த கூண்டு தோட்டம்


என்னுடைய தோட்டத்தில்  பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த  கூண்டு தோட்டம் முழுவதும் அங்காங்கே மாட்டியுள்ளேன். இதில் இருந்து பரவும் பூச்சிக்கொல்லி வாசத்தால் பூச்சிகள் கூண்டின்  உள்ளே செல்லும் போது  இறந்து விடும். இதை  வைத்த பின்னரே பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடிகிறது. இந்தப் பாகற்காய் சாகுபடி அதிகளவு விவசாயிகள் மேற்கொண்டால் தஞ்சை மட்டும் இன்றி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பலாம். நல்ல லாபம் கிடைக்கும்.  சரியான முறையில் சாகுபடியை மேற்கொள்ளும் போது நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும். சந்தை வாய்ப்பு, இயற்கை முறையில் சாகுபடி செய்தல் போன்றவை இன்னும் கூடுதல் வாய்ப்புகள் ஆகும். மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளேன் செலவுகள் போக ஒன்றரை லட்சம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.