Just In





வரவேற்பும், எதிர்ப்பும் சரிசமாக எழுந்தது... எதற்காக தெரியுங்களா?
விவசாயக்கடன் தள்ளுபடி, மண்புழு உர தொழிற்சாலை போன்றவை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அறிவிக்கப்படாதது ஏமாற்றம்.

தஞ்சாவூர்: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. விவசாயிகள் என்ன சொல்றாங்க என்று பார்ப்போம் வாங்க.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார்: 100 முன்னோடி விவசாயிகளை ஜப்பான், சீனா, வியாட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்ல நிதி ஒதுக்கீடு செய்ததை வரவேற்கிறோம். கர்நாடகஅரசு பட்ஜெட்டில் மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகஅரசு அதை எதிர்க்காமல் அதைப்பற்றி இந்த பட்ஜெட்டில் எதுவும் கூறவில்லை. இது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயக்கடன் தள்ளுபடி, மண்புழு உர தொழிற்சாலை போன்றவை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அறிவிக்கப்படாதது ஏமாற்றம்.
கவர்ச்சிகரமான அறிவிப்புகளாக இல்லாமல் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக பட்ஜெட் அமைய வேண்டும். நாற்றுநடவு எந்திரம், அறுவடை எந்திரம், சாக்குபை, சணல் போன்றவை தட்டுப்பாடு நிலவும் நிலையில் அது பற்றிய அறிவிப்பு இல்லை. விவசாய தொழிலாளர்களுக்கான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. விவசாயிகள் போல்தான், விவசாயதொழிலாளர்களும் விவசாயத்திற்கு முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான எந்த அறிவிப்புகளும் இல்லாதது வேதனை அளிக்கிறது.
கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்: வேளாண் பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு 349 ரூபாய் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என்று கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட்டிற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் தெரிவித்ததாவது:
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு 349 ரூபாய் அறிவித்திருப்பது, கோடை உழவு செய்கிற விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 2,000 ரூபாய் மானியம், இயற்கை மரணமடைந்த விவசாயிகளுக்கு இரண்டு லட்சம், இயற்கை விவசாய சாகுபடிக்கு மானியம், 2,925 கிமீ துாரம், சி மற்றும் டி ஆறுகளை டெல்டாவில் துார்வாரும் பணிக்காக 13.80 கோடி வழங்கியதை வரவேற்கிறோம்.
தொடர்ந்து ஐந்தாண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. மேலும் சிறுகுறு விவசாயிகள் இந்த நவீன காலத்தில் வேளாண் கருவிகள் வாடகைக்கு எடுப்பது என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது. மேலும் அதிக வாடகைக்கு கொடுக்க வேண்டிய நிலை இருந்த நிலையில் இ வாடகை செயலின் மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த 17.37 கோடி நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம். இது சிறுகுறு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்:- புதிதாக 1000 இடங்களில் முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்கப்படுவது, டெல்டாவை போல் பிற மாவட்டங்களிலும் நெல் உற்பத்தியை பெருக்க சிறப்பு தொகுப்பு, சிறு, குறு விவசாயிகள் எந்திரங்கள் வாங்க வழங்கப்பட்ட மானியம் 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்வு, 100 வேளாண் விளை பொருட்கள் மதிப்பு கூட்டு மையங்கள் போன்ற பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன்:- பட்ஜெட்டில் வேளாண் திட்டங்களுக்கு கடந்த முறையை விட கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களை தூர் வார நிதி ஒதுக்கியிருப்பதும், கோடை விவசாயம், இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் எந்திரங்கள் வாடகை மையங்கள், விவசாயிகள் இயற்கை மரணம் நிகழ்ந்தால் இழப்பீடு இரட்டிப்பாக வழங்குவது என வரவேற்கத்தக்க அறிவிப்புகள் பல உள்ளன.
ஆனால் தற்போதைய நிலையில் நெல் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்கள் கொள்முதலுக்கு கூடுதல் விலை அறிவிக்கப்படாதது ஏமாற்றம் தருவதாக உள்ளது. இயற்கை பேரிடர் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரியும் நிவாரணம் தொடர்பான அறிவிப்புகள் வராததும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
நெல், கரும்பு போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்படியான விலை கொடுப்பற்கான அறிவிப்பு இல்லாதது, பால் உற்பத்தியாளர்களுக்கான விலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது, மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறப்பதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம். பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு வெறும் ரூ.841 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது போதுமானதல்ல. எனவே விடுப்பட்டுள்ளதை மானிய கோரிக்கை விவாதத்தில் அறிவிக்க வேண்டும்,