மாம்பழம் சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட உடனேயோ காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.
மாம்பழத்துடன் சேர்த்து தயிரை ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக் கூடாது. மாம்பழம் உடலை உஷ்ணப்படுத்தும். ஆனால், தயிர் குளிர்ச்சியை தருகிறது. இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை, வாயுத் தொல்லை, தோல் ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம்.
பால் பொருட்களில் உள்ள அதிகளவு லாக்டிக் அமிலம், மாம்பழத்தில் இயற்கையாகவே உள்ள சர்க்கரையை நொறுக்கும் நொதிகளுடன் கலப்பதால், செரிமானப் பிரச்னை, வயிறு உப்பிசம் ஏற்படுகிறது.
மாம்பழத்துடன், எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடக் கூடாது. அப்படி செய்தால், உடலின் பி.ஹெச்(pH) சமநிலையை கெடுத்து, செரிமான ஆற்றலை பாதிக்கும்.
மாம்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பழங்களில் ஏற்கனவே நீர்ச்சத்து இருப்பதால், தண்ணீர் குடிக்கும் போது, செரிமானக் குறைபாடு ஏற்படுவதுடன், வயிற்றுப் போக்கும் ஏற்படலாம்.
மாம்பழம் சாப்பிட்ட உடனே, வறுத்த உணவுகள், நொறுக்குத் தீணி, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை செரிமானமாக நேரம் எடுப்பதால், மாம்பழமும் செரிக்க அதிக நேரம் எடுக்கும்.
மாம்பழம் சாப்பிட்ட உடன் கார்பனேட்டட் குளிர்பானங்களை உட்கொள்ளக் கூடாது. இவை இரண்டிலுமே சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென்று உயரும். அதோடு, வயிற்று உப்பிசத்தையும் ஏற்படுத்தலாம்.