தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்

பல்லடத்தில் மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கையை அண்ணனே கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை மறைக்க குடும்பமே சேர்ந்து நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்த்தை அடுத்த பருவாய் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 22 வயதான இவரது மகள் வித்யா கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவர் திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. ஆனால் இந்த காதலுக்கு மாணவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 30 ம் தேதி வீட்டில் வித்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வித்யா மீது பீரோ விழுந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ விழுந்ததில் வித்யா உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தார் வித்யாவின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் தலையில் அடித்து வித்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. போலீசார் திவ்யாவின் தாய் தந்தை மற்றும் அவரது மகனிடம் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில், தனது தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை அண்ணன் வாக்குமூலம் கொடுத்து அதிரவைத்தார். வித்யாவின் அண்ணன் சரவணனை கைது செய்ததோடு வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும்  தாய் தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்று சாதி இளைஞரை காதலித்ததால் ஆணவக் கொலை நடந்துள்ளதாக எதிர்ப்பு குரல் எழுந்தது.

இந்தநிலையில் இது ஆணவக் கொலை கிடையாது என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். வித்யாவை நன்றாக படிக்குமாறு அண்ணன் சரவணன் சொன்னதால் 2 பேரும் பேசாமல் இருந்ததாகவும், காதலை கைவிட்டு படிக்குமாறு தெரிவித்த போது வித்யா மறுத்து பேசியதால் ஆத்திரமடைந்த சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் என்றும் திருப்பூர் எஸ்.பி விளக்கம் கொடுத்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola