Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் மலை மேல் உள்ளது தீபத்தூண் அல்ல சர்வே கல் தான் என அரசு தரப்பு வாதிட்டு வந்த நிலையில், வரலாற்று தரவுகளின் படி மலை உச்சியில் உள்ளது சமணர் கால தூண் என நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற  சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உத்தரவுபடி தீபத்தூணில் கார்த்தைகை தீபம் அன்று தமிழக அரசு தீபம் ஏற்றவில்லை இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த சுவாமிநாதன் மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மனுதாரர் மற்றும் CISF படையினருக்கு மலை மேல் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். பின்னர் அடுத்த நாள் மாலை 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 144ஐ அதிரடியாக ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தார்.

அன்றும் மிகப்பெரிய படையுடன் தீபம் ஏற்ற சென்ற இந்து அமைப்பினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்த்து. அந்த வழக்கு விசாரனை தற்போது நடைபெற்று வருகிறது. 

இதனிடையே அரசு தரப்போ அந்த தீபத்தூணில் இதுவரை தீபம் ஏற்றப்பட்டதற்கு எந்தவித வரலாற்று சான்றுகள் இல்லை என வாதிட்டு வந்தது. அதே நேரத்தில் இந்து அமைப்புகள் தரப்பிலோ கோவிலில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் மாறாக உச்சி பிள்ளையார் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தவறு என முறையிட்டனர்.

பின்னர் தொல்லியல் ரீதியாகவும் அந்த தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் ஏதும் கிடைக்காததால் இந்த வழக்கு இழுபறியானது. இதனிடையே அது தீபத்தூணே அல்ல ஆங்கிலேயர்கள் ஊன்றிய சர்வே கல் என்ற செய்தி பரவியது.

இந்நிலையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனது பக்க நியாயங்களை அடுக்கியது. திமுக எம்பி கனிமொழி, 
ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட சர்வே கல் தான் அந்த தூண். அதில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் இந்துக்களின் மனதை புண்படுத்தக்கூடியது. அந்த கல்லிற்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என முறையிட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாய் அன்று விசாரனைக்கு வந்த போது இந்து அறநிலையத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட தீபத்தூண் கோவிலுக்கு சொந்தமானதோ சர்வே கல்லோ அல்ல எனவும் அது சமண கால தூண் என தெரிவித்தது. 

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அது உண்மையில் கல்லா அல்ல தீபத்தூணா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது நீதிமன்றம். மேலும் விளக்கு ஏற்ற அனுமதிப்பது அருகிலுள்ள முஸ்லிம் ஆலயத்தின் உரிமைகளைப் பாதிக்குமா? என்ற கேள்விகளையும் எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola