Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? அதை நான் வெளியே சொன்னால் மோடி பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்படும் என பகீர் கிளப்பியுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது. இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திக் கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்து, கூடுதல் வரியை அமெரிக்கா நீக்கியது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதிபர் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி இந்தியாவை அடமானம் வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்தார். அதானி மீதான வழக்கு, எப்ஸ்டீன் கோப்புகளில் இந்திய அமைச்சர்களுக்கு எதிராக இருக்கும் தகவல்கள் உள்ளிட்ட காரணங்களால் ட்ரம்ப்பிடம் மோடி இறங்கி போய் அவரை பார்த்து பயப்படுவதாக ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கொந்தளித்து வருகின்றனர்.
அதேபோல் ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா நடத்தும் தாக்குதலால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா 30 நாள்களுக்கு இறக்குமதி செய்ய அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கச்சா எண்ணெயை எந்த நாட்டிடம் இருந்து வாங்க வேண்டும் என்பதில் யாருடைய அனுமதியும் தேவையில்லை என இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனால் ட்ரம்ப்பின் கண்ட்ரோலில் தான் மோடி இருப்பதாக விமர்சனம் இருக்கிறது.
இந்தநிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து வரும் விமர்சனங்களை தாண்டி பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியே பிரதமர் மோடியை விளாசியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பார்த்து ஏன் இந்த அளவுக்கு பயப்படுகிறார். பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக எனக்கு தெரிந்த அமெரிக்கர்கள் சொல்கிறார்கள். எதனால்? யாருக்காக இதனை செய்தார் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதை வெளியே சொன்னால் மோடி ப்ரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போரை வர்த்தகத்தை வைத்து மிரட்டி நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன், இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் நடந்த போதே 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் சொன்ன போதே, ”ட்ரம்ப் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள் மோடி. இது யாருடைய அரசாங்கம்” என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.