Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார் சசிகலா. செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்ப்பதற்காக ஒரு ட்ரிக் செய்து அங்கிருந்து சசிகலா கிளம்பி சென்றதாக சொல்கின்றனர்.
பாமக நிறுவனர் மற்றும் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியினர் 2 தரப்பாக பிரிந்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின்படி கட்சியின் தலைவராக இருக்கும் அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். மற்றொரு பக்கம் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் செல்கிறது. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், விசிக அதற்கு முட்டுக்கட்டை போட்டதால் ராமதாஸ் திமுக கூட்டணி கைகூடவில்லை என பேச்சு அடிபடுகிறது.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடனான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கின்றனர். புதிதாக கட்சி தொடங்கிய சசிகலாவும் விஜய்யுடன் கைகோர்க்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அணியுடன் களத்தில் இறங்கி பயணித்தால் நமக்கு அதிக இடம் கிடைக்கும் என ராமதாஸ் ஆதரவாளர்கள் அவரிடம் சொன்னதாக தெரிகிறது. ஆனால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பதை நோக்கியே ராமதாஸ் சிந்திப்பதாக சொல்கின்றனர்.
இந்தநிலையில் திடீரென நேற்று இரவு தைலாபுரம் வந்த சசிகலா ராமதாஸை சந்தித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பதற்காக தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மற்றொரு கதவை திறந்து வேறொரு காரை வெளியே அனுப்பியிருக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அங்கே சென்ற போது பிரதான நுழைவுவாயில் வழியே சசிகலா கார் வெளியே சென்றுள்ளது. இதனால் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருக்க இது போன்ற ஒரு செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பாக ராமதாஸ் தரப்பில் கேட்ட போது கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும், ராமதாசை சந்தித்து நலம் விசாரித்து விட்டு உணவு அருந்திவிட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் கூட்டணி தொடர்பாக சில முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகவும் பேச்சு இருக்கிறது.