
காதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சி
எடப்பாடியில் காதல் திருமணம் செய்த பெண்ணை குடும்பத்தினர் அடியாட்களுடன் வந்து கத்தி, அரிவாளை காட்டி காரில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தனுஷ் கண்டன். இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்ட இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
ஆனால் பெண் வீட்டார் காவல் நிலையத்திற்கு வர மறுத்ததால் போலீசார் தனுஷ்கண்டன் குடும்பத்துடன் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். திருமணம் நடந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், தனுஷ்கண்டன் வீட்டிற்கு கத்தி, அரிவாளுடன் அடியாட்கள் காரில் வந்து இறங்கியுள்ளனர். பட்டப்பகலிலேயே வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை காரில் தூக்கி சென்றுள்ளனர்.
தடுக்க வந்த அக்கம்பக்கத்தினரையும் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் புகார் கொடுத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த பெண் வீட்டார், திடீரென இப்படி ஒரு சம்பவத்தில் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.