
PHOTO வச்சு ஏமாத்தாதீங்க” புலம்பி தள்ளிய ராஜ்கிரண்! சீமானை சொன்னாரா?
என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என ராஜ்கிரண் ஆதங்கமாக பதிவிட்டுள்ளார். சீமான் பிரபாகரன் ஃபோட்டோ சர்ச்சையாகியுள்ள நிலையில், சீமானை தான் அவர் நக்கல் செய்கிறார் என சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை, இருவரும் ஒன்றாக இருக்கும் ஃபோட்டோவை எடிட் செய்ததே நான் தான் என சொல்லி பரபரப்பை கிளப்பினார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் பிரபாகரன் விஷயத்தில் சீமான் நிறைய பொய்களை சொல்லியிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நடிகர் ராஜ்குமார் ஃபேஸ்புக்கில் போட்டுள்ள ஒரு பதிவு விவாதமாக மாறியுள்ளது. அதில் நான் ஒரு நடிகன் என்பதால்,என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது, சாதாரணமாக நடக்கும் விசயம். இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள். "கனடா செல்வம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னை வைத்து படம் தயாரிப்பதெற்கென்று, ஒரு சிபாரிசு மூலம் என்னிடம் வந்து பேசி, என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்ற ஒரு நபர், அதன் பிறகு என்னை சந்திக்கவுமில்லை. படம் தயாரிக்கவும் இல்லை. இது நடந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிறது. அதே நபர் சமீபத்தில் தளபதி என்ற ஒரு தயாரிப்பாளர், இயக்குனரிடம், என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக்காட்டி, தன் பெயரை "ஸ்டார்லின்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு,
ஏதோ ஒரு வகையில் அந்த தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது... என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு” என கூறியுள்ளார்.
சீமானை மறைமுகமாக அட்டாக் செய்யும் வகையில் தான் அவர் இந்த பதிவை போட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர். சீமானுக்காக தான் இந்த பதிவா என கமெண்டில் ஒருவர் கேட்டதற்கு, இல்லை என பதில் கொடுத்துள்ளார் ராஜ்கிரண்.