
Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman
நாம் தமிழர் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டபோது, சின்னம் போனால் என்ன எங்களுக்கு எங்கள் அண்ணன் சீமான் முகம் தான் சின்னம் என்று மேடைக்கு மேடை கர்ஜித்தவர்... மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு 127,642 வாக்குகள் பெற்று திமுக கூட்டணியை திக்குமுக்காட செய்வதவர்.. இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அக்கட்சிக்கு எதிராக அரசியல் செய்ய காத்திருக்கிறார் காளியம்மாள். யார் இவர்? இவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை பார்ப்போம்.
நாகபட்டினம் மாவட்டத்தில் ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர் காளியம்மாள். இவர் அரசியலுக்குள் நுழைந்ததே ஒரு சுவாரஸ்ய கதை. ஆம், மற்ற துறைகளை உள்ள பெண்களை எல்லாம் மரியாதையுடன் அழைக்கும் இந்த சமூகம் மீன் விற்கும் பெண்களை மீன் காரி என்று அழைப்பதை பார்த்து கோவம் கொண்டவர்.. தினம் தினம் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவதை பார்த்து இதை எல்லாம் எப்படி தடுப்பது என்ற எண்ணம் தான் இவருக்கு அரசியல் மீதான ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. ஆனாலும் அதற்கான சரியான காலம் அமையவில்லை அதனால் தன்னால் முடிந்த சமூக சேவைகளை தானே முன்னொடுத்து செய்ய தொடங்கி இருக்கிறார்.. NGO-வில் இணைந்து அதன் மூலம் சமூகப் பணிகளை செய்ய தொடங்கிய காளியம்மாள் அங்குள்ள பெண்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார்..
படிப்பறிவு இல்லா பெண்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் கோழிப்பண்ணை அமைத்து கொடுப்பது, சிறு தொழில் செய்வதற்கான பொருளாதார உதவிகளை செய்வது என தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்து அப்பகுதி மக்களின் நன் மதிப்பை பெற்றார் காளியாம்மாள்.. இதனிடையே தனியார் டிவி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் தன் கணவருடன் பங்கேற்ற காளியம்மாள் அங்கும் மீனவர்கள் படும் துயரம் குறித்து பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இச்சூழலில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயல் ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் மக்கள் சிரமப்பட்ட போது களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி உதவி செய்த காளியம்மாளுக்கு அப்போது தான் நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைத்தது.
ஏன் தனியாக பயணிக்கிறீர்கள் எங்களுடன் இணைந்து அரசியல் களத்தில் பயணித்தால் அது எளிய மக்களுக்கு இன்னும் ஒரு படி உதவி செய்ய பயன்படும் என்று நாம் தமிழர் கட்சி சொல்லவே, நாதகவின் தமிழ் தேசிய கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார் காளியம்மாள். தான் ஏறிய மேடையில் எல்லாம் அனல் பறக்க பேசியதோடு எளிய மக்களுக்கு புரியும் படியும் பேசினார். தன்னுடைய முதல் மேடையிலேயே, “திரவிடமா தமிழ் தேசியமா .. வா மோதி பார்ப்போம்”என்று திமுகவிற்கும் அதிமுகவிற்கும் சவால் விடுத்தவர். “சாதி மதம் இல்லாத அனைத்து உயிர்களுக்குமான அரசியல் எங்கள் அரசியல்” என்று பேசி தன்னுடைய பேச்சாற்றலாம் நாம் தமிழர் கட்சியின் அனைத்து மேடைகளிலும் தோன்றி அக்கட்சியின் முகமாக மாறினார் காளியம்மாள். இப்படிப்பட்ட சூழலில் தான் பெண்கள் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டே அதாவது 2019 ஆம் ஆண்டே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். வட சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள் தான் சந்தித்த முதல் தேர்தல் களத்திலேயே 60,515 வாக்குகளை பெற்று அக்கட்சியின் நட்சத்திர முகமாக மாறினார். பின்னர் 2021 ஆம் ஆண்டு பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை மக்களவை தொகுதியி போட்டியிட்டு 127,642 நான்காவது இடத்தை பிடித்தார். தான் சந்தித்த தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் மக்கள் குரலாய் விளங்கிய காளியம்மாள் சீமானுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சியின் முகமாக மாறினார்.
இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தான் தான் நாம் தமிழரின் முகமாக இருக்க வேண்டும் என்னை விட்டு வேறு யாரும் நாம் தமிழரின் முகமாக இருக்க கூடது என்று நினைத்தாக கூறப்படுகிறது.
இதனாலையே காளியம்மாளை சீமான் கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுக்கியதாகவும் தகவல் வெளியானது. முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் மேடையில் வைத்துக்கொண்டே சீமானுக்கு எதிராக காளியம்மாள் பேசினார். அவர் பேச்சு அடுத்ததாக பேசிய சீமான் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசிய ஆடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பெண் நிர்வாகியை இப்படித்தான் தரம் தாழ்ந்து பேசிவீர்களா என்று எதிர்க்கட்சிகள் சீமானுக்கு எதிராக கொந்தளிக்க, நான் பிசுறு என்று சொல்வோன்.. அப்றம் என் உசுரு என்று சொல்வோன் “ என சொல்லி சமாளித்தார் சீமான்
இப்படி இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிலவிய நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் காளியம்மாள். அதில், “நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான், அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும். அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை, கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். ”என்று கூறியுள்ளார் காளியம்மாள். நாம் தமிழர் கட்சிக்காக களமாடிய காளியம்மாள் இப்போது அக்கட்சிக்கு எதிராகவே களமாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.