VCK Alliance PMK | திருமாவுடன் பாமகவினர் சந்திப்பு உற்று நோக்கும் கட்சிகள் விஜய் மாஸ்டர் ப்ளான்
விசிகவும் - பாமகவும் எதிரெதிர் துருவத்தில் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசி இருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. 2026-ல் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த இரண்டு கட்சிகளின் சந்திப்பும் திராவிடகட்சிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.
சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இப்போதே தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. ஒருபுறம் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக அக்கட்சியின் மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து வருகிறது. மறுபுறம் திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவும் கூட்டணியில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி அமையும், யார் யருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது. இச்சூழலில் தான் வட மாவட்டங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாமக மற்றும் விசிக சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் எதிரெதிர் திசையில் இந்த இரண்டு கட்சிகளும் இருந்தாலும் இந்த சந்திப்பு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி அறிக்கையை வெளியிடும் பாமக நிறுவனர் இராமதாஸ் இந்த 2025-26 ம் ஆம் ஆண்டிற்கான shadow budget- ஐ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். ராமதாஸ் வெளியிடும் இந்த shadow budget-ல் இடம் பெறும் முக்கியமானவற்றை தமிழ் நாடு அரசும் நிறைவேற்றும். அதேபோல் அரசியல் களத்திலும் இது பேசு பொருளாக மாறும்.
இச்சூழலில் தான் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இருக்கும் விசிக அலுவலகத்தில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது திருமாவளவனிடம் shadow budget- ஐ கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கொண்ட திருமாவளவன் அடுத்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் ராமதாஸ் வெளியிட்ட shadow budget குறித்து பேசுவதாக உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.
எதிர் எதிர் திசையில் இருக்கும் பாமக மற்றும் விசிக வின் சந்திப்பு பேசு பொருளாகியுள்ள நிலையில் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இதனை உற்று நோக்குவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் தவெக பொதுச்செயலாலர் ஆனந்தையும் சந்தித்துள்ளனர். ஏற்கனவே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார். இந்த சூழலில் பாமகவினர் அடுத்தடுத்து திருமாவளவன் மற்றும் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து பேசி இருப்பது இவர்களுக்குள்ளான கூட்டணியை உருவாக்குவதற்கான அச்சாணி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.