செல்வபெருந்தகைக்கு எதிராக சதி?காங்கிரஸில் கோஷ்டி மோதல்பின்னணியில் K.S.அழகிரி?

Continues below advertisement

செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து இறக்கியே ஆக வேண்டும் என்ற ஒற்றை டார்கெட்டுடன் தமிழக காங்கிரஸில் ஒரு மிகப்பெரிய அணி உருவாகியிருப்பதாக சொல்கின்றனர். இபிஎஸ், செல்வப்பெருந்தகையை விமர்சித்ததன் பின்னணியிலும் முக்கிய காரணம் இருப்பதாக பேச்சு இருக்கிறது. 

செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னர் அணி, அணியாக டெல்லி சென்ற தலைவர்கள் எல்லாம் போன வேகத்திலேயே மீண்டும் தமிழ்நாடு திரும்பி வந்தனர். இப்போது அந்த அணிகளில் கூடுதலாக மற்ற கோஷ்டியினரும் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கு தற்போதைய பொது எதிரியாக மாறியிருக்கிறார் செல்வபெருந்தகை. குறிப்பாக, மூன்று எம்.பிக்கள், ஒரு எம்.எல்.ஏ என இந்த கோஷ்டியில் ஐக்கியம் ஆகி, செல்வபெருந்தகைக்கு எதிராக டெல்லிக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்.

சமீபத்தில், திமுக கூட்டணியில் அதிக சீட் கேட்டு பெறுவோம் என்றும் ஆட்சியில் பங்கு கேட்போம் என்றும் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ ராஜேஸ்குமார் பேசியதும் இதன் பின்னணியில்தான். இதன் நோக்கம் ஆட்சியில் பங்கு பெறுவது மட்டும் கிடையாது, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி செல்வபெருந்தைகையை தலைவர் பதவியை விட்டு நீக்கவும் தான் என சொல்கின்றனர். உண்மையிலேயே, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி நினைத்திருந்தால், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பில் இருந்த போதே கேட்டிருக்கலாமே என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கக்கன், மரகதம் சந்திரசேகர், இளையபெருமாள் ஆகியோருக்கு பின்னர், பல ஆண்டுகளுக்கு பிறகு, கமிட்டித் தலைவர் ஆகியிருக்கிறார் செல்வபெருந்தகை எனும் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர். அதனால் வெறுப்பில் இருந்த சிலர்  தொடக்கம் முதலே அவர் சொல்வதை கேட்காமல் தாமாகவே அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர். தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டித்த பிறகு, வேறு வழியின்றி செல்வபெருந்தகை சொல்வதை கேட்கத் தொடங்கினார்.  

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வைத்து செல்வபெருந்தகையை விமர்சனம் செய்ய வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள். இத்தனை நாட்களாக செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சிக்காமல் இருந்த இபிஎஸ் இப்போது திடீரென அவரை பிச்சைக்காரோடு ஒப்பிட்டு விமர்சித்துள்ளதே அதற்கு சான்று என பேச்சு இருக்கிறது. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து, அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற கணக்கு போட்டவர்களின் உள்ளடி வேலைதான் இது என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே செல்வப்பெருந்தகை மீது இருந்த கடுப்பு தான் இப்போது வெடிக்க தொடங்கியுள்ளது. கடந்த எம்.பி. தேர்தலில், சீட் வாங்கித் தருவதாக கூறி தென்மாவட்டத்தை சேர்ந்த டெல்லியில் லாபி செய்யும் ஒரு முக்கிய பிரமுகர் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியிருக்கிறார். இந்த தகவலை அறிந்த செல்வபெருந்தகை அவர் தேர்வு செய்த நபர்களுக்கு எம்.பி. சீட் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். இதனால் அவரும் செல்வப்பெருந்தகை மீது கோபத்தில் இருந்துள்ளார். 

மேலும், யாருமே எதிர்பாராமல் மயிலாடுதுறையில் சுதா என்ற கட்சியின் சாதாரண நிர்வாகியை வேட்பாளராக நிறுத்தி, அவருக்கான உதவிகளை செய்து அவரை எம்.பியாக்கினார். கடலூரில் எம்.பி-யாகிவிட வேண்டும் என்று சீட்டிற்கு மெனக்கிட்ட முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பதில் விஷ்ணுபிரசாத்திற்கு பரிந்துரை செய்தார் செல்வபெருந்தகை. இப்படி அவர் செய்த விஷயங்களும் கோஷ்டியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின.

ஆனால், தேசிய காங்கிரஸ் சொன்ன அத்தனை அறிவுறுத்தல்களையும் தமிழ்நாட்டில் பின்பற்றி, கிராமம் தோறும் கூட்டங்கள் போட்டு காட்டியுள்ள செல்வபெருந்தகையை, இந்த கோஷ்டியினரால் இப்போதைக்கு பதவியை விட்டு நீக்க முடியாது என்றும், அவர் செய்யும் அனைத்து பணிகளையும் உடனுக்குடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவிற்கு தெரியப்படுத்தி வருவதாலும், திமுக தலைமையும் செல்வபெருந்தகையை விரும்புவதாலும் தேர்தல் வரை செல்வபெருந்தகைதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola