Seerkazhi Govt Hospital : தரையில் உறங்கும் நோயாளிகள்படுக்கைகள் பற்றாக்குறை!அரசு மருத்துவமனையில் அவலம்
சீர்காழி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் வராண்டாவில் தரையில் படுத்து உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு ஆயிரம் நோயாளிகளுக்கு மேல் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் உடல்நலம் முற்றிலும் முடியாதவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்பொழுது அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு போதுமான படுக்கை வசதி இல்லாத சூழல் நிலவுகிறது
பெண்கள் பிரிவில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு போதுமான படுக்கை வசதி இல்லாததால் வெளிப்பகுதியில் தரையில் படுத்து தூங்கி வருகின்றனர். அவ்வாறு தூங்குபவர்கள் உறவினர்கள் பாதுகாப்புடன் அவர்களது மடியில் படுத்து தூங்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெளியில் உறங்குபவர்களுக்கு இரவு நேரத்தில் கொசுக்கடியில் நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு பல மாதங்களாக நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.